போலீசாரிடம் அநாகரீகமாக பேசிய நபரின் ஜாமின் மனு தள்ளுபடி
சென்னை, நவ.4- சென்னை மெரினாவில் போலீசாரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள லூப் சாலையில், அக்டோபர் 20 இரவு 12 மணிக்கு சந்தேகத்திற்கிடமாக இருவர் காருடன் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் ரோந்து வந்த மயி லாப்பூர் காவல்நிலைய காவலர் காரை எடுத்துக் கிளம்புமாறு அவர்களை அறி வுறுத்தினார். சந்திரமோகனும் அவரது தோழி தனலெட்சுமியும் வாகனத்தை எடுக்க மறுத்ததுடன் காவல் துறையினரை ஆபாசமாக பேசினர். இது குறித்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, மயிலாப்பூர் போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட, சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகி யோர் ஜாமின் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்தி கேயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்க ளையும் விசாரித்த நீதிபதி, இருவரின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
போதை பொருட்கள் விற்ற 5 பேர் கைது
அம்பத்தூர், நவ. 4- சென்னை ஜெ.ஜெ. நகர் பகுதியில் போதை ஸ்டாம்பு,போதை மாத்திரைகள் விற்றதாக 5 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜெ.ஜெ.நகர் பகுதியில் போதை ஸ்டாம்பு,போதை மாத்திரை விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல் துறையினரை ஜெ.ஜெ.நகர் பகுதியில் கண்காணிப்பில் ஈடு பட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கேயன் (21) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தாராம். இதையடுத்து காவல் துறையினர் அவரை சோதனையிட்டனர். சோதனையில் கார்த்திகேயன், போதை ஸ்டாம்புகள், கஞ்சா ஆகியவற்றை வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த பா.அரவிந்த் பாலாஜி (20), கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த தா.வத்சல் (21), மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த அ.ஆருணி (20),அதே பகுதியைச் சேர்ந்த திரிசன் சம்பத் (20) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த கும்பலிடமிருந்து மொத்தம் 94 போதை ஸ்டாம்புகள், 48 போதை மாத்திரைகள், 700 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கார் ஏற்றி கொல்ல முயற்சி: துணிக்கடைக்காரர் கைது
சென்னை,நவ.4- சென்னை வேளச்சேரியில் தொழில் போட்டி காரண மாக காரை ஏற்றி துணிக்கடைக்காரரை கொலை செய்ய முயன்ற பக்கத்து கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வேளச்சேரி 5வது பிரதான சாலையில் துணிக்கடை நடத்தி வரும் சிவக்குமார் என்பவர், மதுபோதையில் காரை ஓட்டி வந்து எதிரே துணிக்கடை நடத்திவரும் ஜெபஸ்டினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கடையின் கண்ணாடிகளை உடைத்து காருடன் கடைக்குள் புகுந்து ஜெபஸ்டினை கொல்ல முயன்றுள்ளார். கார் தன்னை நோக்கி வேகமாக வந்ததைப் பார்த்து மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடி தப்பித்துள்ளார் ஜெபஸ்டின். சிவக்குமாரின் கார், துணிக்கடைக்குள் புகுந்து, கண்ணாடிகளை நொறுக்கியது. கார் உள்ளே புகுந்ததில் கடையில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
வடபழனி அஞ்சலகத்தில் வாழ்நாள் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்
சென்னை, நவ. 4 - ஒன்றிய, மாநில மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் வெள்ளியன்று (நவ.8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வடபழனி துணை அஞ்சலகத்தில் நடைபெறுகிறது. பயனாளிகள் தங்களுடைய பென்சன் பேமண்ட் ஆர்டர் (பிபிஓ) மற்றும் ஆதார், வங்கி கணக்கு புத்தகம் ஆகிய வற்றின் நகல்களை கொண்டு வர வேண்டும். போஸ்டல் இன்போ செயலி மூலமாக பதிவு செய்தோ அல்லது வீட்டிற்கு வரும் அஞ்சல்காரர் மூலமாகவும் இந்த சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மேலும் ரூ.70 செலுத்த வேண்டும் என்று வடபழனி துணை அஞ்சலக தலை வர் பவித்ரா தெரிவித்துள்ளார்.
காது கேளாதோர், வாய்பேசாதோருக்கு சிறப்பு கிளை அமைப்பு
சென்னை, நவ. 4- காதுகேளாதோர், வாய் பேசாதோருக்கான சென்னை சிறப்புக் கிளை ஞாயிறன்று (நவ.3) உதயமானது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் இந்த சிறப்பு கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர் பா.ஜான்சிராணி, துணைச் செயலாளர் பி.ஜீவா, சென்னை மாவட்ட நிர்வாகிகள் சுரேந்திரன், எஸ்.மனோன்மணி (மத்திய சென்னை), ஜெயச்சந்திரன், எஸ்.ராணி (வடசென்னை), பி.கிருஷ்ணன், எம்.குமார் (தென்சென்னை), எம்.சரஸ்வதி எம்.சி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளையின் தலைவராக மைதிலி, செயலாளராக பவானி, பொருளாளராக விக்டோரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மெட்ரோ ரயிலில் 90 லட்சம் பேர் பயணம்
சென்னை, நவ.4- சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 91 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக வான்சாகசம் நடந்த தினத்தன்று சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். குறிப்பாக, அரசினர் தோட்டம் மெட்ரோ நிறுத்தத்தில் இருந்த 59,776 பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.
வி.கே.டி. சாலையை விரைந்து முடிக்கக் கோரி நவ.9 சாலை மறியல்
கடலூர், நவ.4 – விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடை பெற்று வருகிறது. கண்ட்ரோக் கோட்டையில் இருந்து மீன் சுருட்டி வரை உள்ள கடலூர் மாவட்ட பகுதி களில் பல்வேறு இடங்களில் குண்டும் குழியு மாக சாலைகள் உள்ளதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு கை, கால் முறிவு மற்றும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வந்தாலும், பணிகள் இன்னும் தொடங்காமல் உள்ளது. சாலை விரிவாக்க பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேதமடைந்துள்ள இடங்க ளில் சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரை உள்ள சாலையை புதிய ஒப்பந்தம் விடப்பட்டதில் இருந்து 6 மாதத்திற்குள் முழுமையாக முடிக்க வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள சாலை முழுவதையும் ஒரு வார காலத்திற்குள் போர்க்கால அடிப்படையில் செப்பனிட்டு சீரான போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நவம்பர் 9 அன்று காலை 10 மணிக்கு பண்ருட்டி, நெய்வேலி ஆர்ச் கேட், வடலூர், சோழத்தரம் ஆகிய நான்கு மையங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்று மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மக்கள் குறை தீர்க்கும் நாளில் 407 கோரிக்கை மனுக்கள்
விழுப்புரம், நவ.4- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமையில் திங்களன்று (நவ.4) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 407 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. இந்தக் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடன் உதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 407-மனுக்களை பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறி வுறுத்தினார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என துறை சார்ந்த அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோக ஜோதி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) முகுந்தன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவக்கொழுந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் - திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியளவில் ரத்து
விழுப்புரம், நவ.4- திருச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள பழைய ரயில்வே மேம்பாலத்தை இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் ரயில்கள் பகுதியவில் ரத்து, புறப்படும் இடம் மற்றும் ரயில் நிறுத்தி இயக்கம் மாற்றம் போன்றவை செயல்படுத்தப்பட உள்ளன. அதன்படி விழுப்புரத்திலிருந்து காலை 5.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருச்சி பயணிகள் ரயில் (வ.எண். 06891) நவம்பர் 6 முதல் 21ம் தேதி வரை பொன்மலை - திருச்சி ரயில் நிலையம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த ரயில் பொன்மலையுடன் நிறுத்தப்படும். எதிர் வழித்தடத்தில் திருச்சியிலிருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் திருச்சி - விழுப்புரம் பயணிகள் ரயில் (வ.எண்.06892) திருச்சி சந்திப்பு - பொன்மலை ரயில் நிலை யங்களுக்கு இடையே நவம்பர் 6 முதல் 21ம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் பொன்மலை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.09 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும். சென்னை எழும்பூரிலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் (வ.எண்.16127) நவம்பர் 6 முதல் 21ம் தேதிவரை வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 10 நிமிடங்களும், நாகர்கோவில் - மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையம் வரை இயக்கப்படும் விரைவு ரயில் (வ.எண்.16352) நவம்பர் 7,10,14,17,21 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 60 நிமிடங்களும் நிறுத்தி இயக்கப்படும். கன்னியாகுமரி ரயில் நிலையத்திலி ருந்து காலை 5.50 மணிக்குப் புறப்படும் கன்னியாகுமரி - ஹவுரா அதிவேக விரைவு ரயில் (வ.எண்.12666) நவம்பர் 9,16 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 60 நிமிடங்களும்நிறுத்தி இயக்கப்படும் என்று அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வந்த அமெரிக்கரிடம் சேட்டிலைட் போன் பறிமுதல்
சென்னை,நவ.4- சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சனிக்கிழமையன்று நள்ளிரவு புறப்பட தயாராக இருந்தது. அந்தவிமானத்தில் பயணம் செய்ய வந்த அமெரிக்காவைச் சேர்ந்தடேவிட் (55) என்ற பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, சேட்டிலைட் போன் ஒன்று இருந்தது. இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக சேட்டி லைட் போன் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகள் சேட்டிலைட் போன் எடுத்து வந்தால், பாதுகாப்பு அதிகாரிகள் அதை வாங்கி வைத்துக் கொண்டு ரசீது கொடுத்து விடுவார்கள். பின்னர், அந்த பயணி இந்தியாவில் இருந்து திரும்பிச் செல்லும் போது, அந்த போனை திருப்பி கொடுப்பது வழக்கமாகும். ஆனால் இந்த அமெரிக்க பயணி, தடையை மீறி சேட்டி லைட் போன் வைத்திருந்ததால், பாதுகாப்பு அதிகாரி கள் அவரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க வில்லை.
காலமானார்
சிதம்பரம், நவ.4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரி அஞ்சலையின் கணவர் ராமையா உடல்நலக்குறைவால் திங்களன்று (நவ.4) காலமானார். சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. அவரது உடலுக்கு கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பி னர் பா.ஜான்சிராணி, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில துணைத் தலைவர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ராமச்சந்திரன், இரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் முத்துக்குமாரன், நகர குழு உறுப்பினர்கள் சங்கமேஸ்வரன், அமுதா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த ராமையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கடலூர் மாவட்டக் குழு உறுப்பினர் பூராயரின் மாமனாராவார்.