மதுராந்தகம், ஜன.9- மதுராந்தகத்தில் செயல்படும் தற்காலிக பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைத்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பேருந்து நிலையத்திலிருந்து சூனாம்பேடு, செய்யூர், அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுராந்தகம் நகரத்தில் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையத்தை இடித்து புதிய பேருந்து நிலையத்தை கட்ட முடிவு செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து மதுராந்தகம் நகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அண்ணா பேருந்து நிலையத்தை இடித்து அப்புறப்படுத்தி புதியதாக பேருந்து நிலை யம் கட்டடம் கட்டுவதற்கு சுமார் ரூ.2.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த பணி கடந்த செப்டம்பரில் கோரப்பட்டு தற்போது பணிகள் துவங்கியுள்ளன. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் ஓரமாக மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்காலிக பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது செயல்படும் பேருந்து நிலையத்தில் மேற்கூரை ஏதும் அமைக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த திங்களன்று மதுராந்தகத்தில் பெய்த கன மழையில் மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கு இடம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் முடியும் வரை இந்த தற்காலிக பேருந்து நிலையம் செயல்படும் என்பதால் மேற்கூரை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.