districts

img

கூடுதல் பேருந்து கேட்டு மாணவர்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி, டிச.9- கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அருகே மூலக்காடு கிராமத்தில் அரசு மாதிரி பள்ளி உள்ளது. 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல பள்ளி நேரத்துக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் கூட்ட நெரிசலுடன் பெரும் சிரமங்களுக்கு இடையே பேருந்தில் பயணம் மேற் கொண்டு வந்தனர். மேலும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு வந்து செல்ல முடியாமலும் தவித்தனர். இதனால் பாதிக்கப்பட்ட மாதிரி பள்ளி மாணவர்கள் பள்ளி அருகே உள்ள சேராப்பட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது மாணவர்கள், பள்ளி நேரத்துக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு வந்து செல்ல முடியவில்லை. இதனால் கல்வி பயில்வதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே, பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற காவல்துறையினர் இதுபற்றி போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் பேசி கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து வகுப்பறைகளுக்கு சென்றனர்.