சங்கராபுரம், மே 23- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம், ரங்கப்பனூரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு கிணறு, ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் மின் மோட்டார், குழாய்கள் மற்றும் மின்சாதனப் பொருட்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் சங்கராபுரம் - சேராப்பட்டு சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடபொன்பரப்பி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தி, மின்சாதன பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.