விருத்தாச்சலம், ஏப்.21- விருத்தாசலம் விஇடி பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்டிஓ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விஇடி பள்ளியில் காமவெறி பிடித்த ஆசிரியரால் தற்கொலைக்கு முயன்று பாதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு மருத்துவ உதவி வழங்க கோரியும், மாணவி தேர்வு எழுதுவதற்கு உரிய ஏற்பாடு செய்ய கோரியும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாலியல் சமத்துவ கல்வி நடத்திடவும், பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் வட்டச் செயலாளர் கே.அன்புசெல்வி தலைமை தாங்கினார். மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, மாவட்டத் தலைவர் பி. முத்துலட்சுமி, மாணவர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ், வாலிபர் சங்க பொருளாளர் கலைச்செல்வன், வட்டச் செயலாளர் பரமசிவம், சண்முகம், வீரா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் குமரவேல், மாநிலக் குழு உறுப்பினர் சின்னதம்பி, மாவட்டத் தலைவர் செம்மலர் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க பொருளாளர் பி.செல்வகுமார், திட்டக்குடி வட்டத் தலைவர் ஆர்.பாண்டியன், மாவட்டத் தலைவர் சந்தன மேரி, திட்டக்குடி தலைவர் ஜி. முத்துலட்சுமி, மாணவர் சங்க வட்டத் தலைவர் பி.சிவானந்தம், கல்லூரி தலைவர் வினோதினி ஆகியோர் பங்கேற்றனர்.