districts

வெளிநாட்டு பரிசுப் பொருள் அனுப்புவதாக ரூ.2 லட்சம் மோசடி

விழுப்புரம், டிச. 22- வெளிநாட்டிலிருந்து பரிசுப் பொருள் அனுப்புவதாகக் கூறி அரசு ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த நபர்களை காவல் துறை யினர் தேடி வருகின்றனர். விக்கிரவாண்டி வட்டம், மேலக்கொந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (40). இவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி யாளராக பணியாற்றி வருகிறார். இவர் முகநூலில் அலைஸ்ஜான்சன் என்ற நபரிடம் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில், ஜெயப்பிரகாசை வாட்ஸ்ஆப் மூலம் தொடர்புகொண்ட மற்றொரு நபர், தனது பெயர் சிஸ்டர் அலீஷா மேரிஜான் என்றும் வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறி நட்பாக பழகியுள்ளார்.  பிறகு, இம் மாதம் 9ஆம் தேதி ஜெயப்பிரகாசை தொடர்புகொண்டு தனது பெற்றோரின் திருமண நாளுக்காக வெளிநாட்டு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளேன் என்றும் கூறி அதன் புகைப்படங்களையும் வாட்ஸ்ஆப்பிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கிடையில், மேலும் ஒரு நபர் தொடர்புகொண்டு தில்லியில் உள்ள விமான நிலையத்திலிருந்து பேசுவதாகவும், ஜெயப்பிரகாசுக்கு ஒரு பார்சல் வந்துள்ளதாகவும், அதனை பெற்றுக்கொள்ள கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதையும் நம்பிய ஜெயப்பிரகாஷ், அந்த நபர் கூறியவாறு அவரது வங்கி கணக்கில்  கூகுள்பே மூலம் ரூ. 33,751 செலுத்தியுள்ளார்.  மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர், பார்சலில் வெளிநாட்டு கரன்சி இருப்பதாகவும், ஏ.எம்.எப். சான்றிதழுக்காக பணம் கட்டி னால்தான் பார்சலை பெற முடியும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, அதே வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அந்த பரிசுப் பொருட்களை ஜெயப்பிரகாசுக்கு அனுப்பாமல் அந்த நபர் மேலும் பணம் கேட்டுள்ளார். இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயபிரகாஷ் இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.