சிதம்பரம், ஜன.19- விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை சிதம்பரம் வழியாக புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சிதம்பரம் அருகே வேளக்குடி பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. வேளக்குடி ஜெயங்கொண்டபட்டினம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல மேம்பாலத்தின் சற்று தூரத்தில் நுழைவு வழி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வேளக்குடி-ஜெயங்கொண்டம் பட்டினம் செல்லும் சாலையில் ஏற்கனவே, இருந்த வழியில் மையப் பகுதியில் நுழைவு வழி அமைக்க வேண்டும் என கடந்த மாதம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (ஜன.19) காலை வேளக்குடி பகுதியில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கூட்டத்திற்கு தமாக விவசாய அணி தலைவர் தவமணி தலைமை தாங்கினார். இதில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மாசிலாமணி, பாமக மாவட்டச் செயலாளர் செல்வ மகேஷ், திமுக பொதுக்குழு உறுப்பினர் மஞ்சு, அதிமுக இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி, தாமாக லோகநாதன் பாமக விவசாய அணி சஞ்சீவி உழவர் உற்பத்தியாளர் சங்க வசந்த் பல்வேறு கட்சிகளை சார்ந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பேசினர். இதில் பாலத்தின் நுழைவு வழி வேளக்குடி மையப்பகுதியில் அமைக்கும் வரையில் மேம்பாலம் அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும். வேளக்குடி மையப்பகுதியில் நுழை வழி அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 22-ஆம் தேதி முதல் வேளக்குடி பேருந்து நிறுத்தம் அருகே காலவரையற்ற சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.