districts

img

நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடி, மே 23- தூத்துக்குடி அருகே 2117 ஏக்கர் நில மோசடி தொடர்பாக பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகம் எல்லைக்குட்பட்ட தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தை உள்ளடக்கி சர்வே எண் 1 முதல் 156 வரை உள்ள 1043.37 ஏக்கர் நிலங்களும் வடக்கு சிலுக்கண்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட சர்வே எண் 1 முதல் 146 வரை உள்ள 1073.56 ஏக்கர் நிலங்களும் ஆகமொத்தம் 2116.93 ஏக்கர் நிலங்களை நெல்லையை சேர்ந்த டி.என்.சிவசுப்பிரமணியன் பிள்ளை மகன் செந்தில் ஆறுமுகம் என்பவர் போலிக் கிரையம் மூலம் 18.4.2022ல் கோவையை சேர்ந்த அன்பு ராஜ் கிஷோர் என்பவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக பொதுமக்கள் போராட்டத்தை ஒட்டி பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.  

ஆனால் மேற்படி போலி பத்திர பதிவு செய்த செந்தில் ஆறுமுகம் என்பவர் ஏற்கனவே கடந்த 2011ஆம் ஆண்டு கே.பி.தளவாய்புரம் கிராமத்தில் உள்ள மொத்த சொத்துக்களையும் விளாத்திகுளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பத்திரப் பதிவு செய்து மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இன்றுவரை குற்ற வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் பல கிராமங்களில் நிலங்களை அபகரிக்கும் பொருட்டு அதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறார்.  எனவே தொடர்ந்து நில மோசடியில் ஈடுபட்டு வரும் செந்தில் ஆறுமுகம் மற்றும் அவருக்குப் பின்னணியில் உள்ள கும்பலையும் கைது செய்து கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அதே போல் போலியாக பத்திரப்பதிவு மேற்கொண்ட பதிவாளரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்யவும், மேலும் போலி பத்திரப் பதிவிற்கு உடந்தையாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் புவிராஜ், மாவட்டத் தலைவர் ராகவன், மாவட்ட துணைத்தலைவர் சங்கரன் ,சிஐடியு சார்பில் காசி மற்றும் ஊர் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.