districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையில் புதுப்பிக்கத்தக்க  எரிசக்தி கண்காட்சி

சென்னை, பிப்.11- மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி சென்னையில் நடைபெறவுள்ளது. தொழில்துறை ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் சமீபத்திய முன்னேற்றங்களை வெளிப்படுத்துவதற்கும், இந்த கண்காட்சி உதவும்.  கேட்டலிஸ்ட் கண்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் இந்த முதன்மை நிகழ்வு, முக்கிய பங்குதாரர்கள், தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் புத்தாக்க ஆற்றல் கொண்டவர்களை ஒன்றிணைக்கும். சென்னை   நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்  பிப். 13 முதல் 15 ஆம் தேதி வரை இத் கண்காட்சி நடைபெற உள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்கள், நிலையான தீர்வுகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க துறையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்கான ஒரு தளமாக இந்த கண்காட்சி இருக்கும்.  பங்கேற்பாளர்கள் இந்த துறையில் உள்ள அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளும் அமர்வுகள் நடைபெறும். தொழில்நுட்ப விளக்கக்காட்சிகள் மற்றும் குழு விவாதங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரக்கோணம் - சென்ட்ரல்  மின்சார ரயில் சேவை பாதிப்பு பயணிகள் கடும் அவதி

சென்னை, பிப்.11- வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்துக்கு அருகே திடீரென தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டதால் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், அரைமணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் முக்கிய மார்க்கமாக சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் உள்ளது. இத்தடத்தில் அவ்வப்போது மின்சார ரயில் சேவை தாமதத்தால், பயணிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். திங்கள்கிழமை காலை, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர், ரயிலில் அடிப்பட்டு இறந்தார். அவரது உடல் இன்ஜினில் சிக்கியது. இதனால், அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில்களின் சேவைகள் அரைமணி நேரம் பாதிக்கப்பட்டது.

ரயிலில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை   குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க சிபிஎம் கோரிக்கை

வேலூர், பிப்.11 - ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு, ஹேமராஜ் என்பவனால் பாலியல் வன்முறை செய்து அவரை கொலை செய்யும் நோக்கோடு தள்ளிவிட்ட கொடுங்குற்றத்திற்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டுமென சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் அப்பொண்ணுக்கு கை, கால்களில் அடிபட்டு, வயிற்றில் சிசுவும் இறந்துள்ளது. இதனால் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் உள்ள சிசு இறந்ததால் உடல் நிலை மோச மானதால்   உயர் சிகிச்சை பெற்று வரு கிறார். இதுகுறித்து சிபிஎம் வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.டி.சங்கரி விடுத்துள்ள அறிக்கையில், ரயில்வே நிர்வாகம் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகை யில் பெண்கள் பெட்டியில் துப்பாக்கி வசதி யுடன் இருக்கும் பெண்காவலர்களை பணியமர்த்த வேண்டும். அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுப்பை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக ஜோலார்பேட்டையில் ரயில் நிலைய சந்திப்பில் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் காவல்துறை கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும்.ரயில் பயணிகளுக்கு அவசர உதவி எண் அறிமுகம் செய்ய வேண்டும். ஏற்கெனவே கொலை, கொள்ளை பல்வேறு குற்ற வழக்கு களில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து பிணையில் வந்து மீண்டும் இக்கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளி ஹேம ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து மீண்டும் அவர் வெளியே வரமுடியாத வகையில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். மாநில அரசு மற்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என தெரிவித்துள்ளார்.

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட  கர்ப்பிணியின் சிசு அகற்றம்!

வேலூர், பிப்.11- ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணிக்கு ரயிலில் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றபோது அந்த பெண் கூச்சலிட்டார்.  அப்போது, சற்றும் எதிர்பாராத நிலையில், ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்டால் பலத்த காயமடைந்தார். இந்த பெண்ணுக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்சனைகளால் உயர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், கருச்சிதைவு ஏற்பட்டதால் 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றது உறுதி செய்யப்பட்டது. பிறகு, வயிற்றில் இருந்த சிசு அகற்றப்பட்டுள்ளது. மேலும் பெண்ணின் கை, கால், மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலி கால் சென்டர்  நடத்திய 4 பேர் கைது 

விழுப்புரம். பிப்.11- விழுப்புரம் மாவட்டம், ஒழிந்தியாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ. இவர் தச்சு வேலை செய்யும் தொழிலாளி. இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், கட்டணமின்றி குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய ராஜூ, தனது ஆதார், பான் கார்டு நகல்களை அனுப்பி வைத்துள்ளார். அந்த மர்ம நபர், கடன் பெற பிராசசிங் கட்டணம். டாக்குமெண்ட் சார்ஜ், ஜி.எஸ்.டி  மற்றும் காப்பீடு செய்ய பணம் கேட்டுள்ளார். இதையடுத்து, 15 தவணைகளாக ரூ.8.20 லட்சம் அனுப்பி வைத்துள்ளார் ராஜூ.  ஆனால், கடன் தொகையை பெற்றுத் தரவில்லை. பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.  பின்னர் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் செஞ்சியில் கால் சென்டர் நடத்தி வந்த அந்தோணி மனைவி வளர்மதி, சென்னையை சேர்ந்த கோபிகிருஷ்ணன், தினேஷ், நெய்வேலி நடராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இணையவழி மூலம் நூதன முறையில் மோசடி செய்தது, தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட போலி கால் சென்டர் களை நடத்தி வந்ததும் தெரியவந்தது. பின்னர் 4 பேரையும் கைது  செய்தனர். மேலும், அந்த கும்பல் பயன்படுத்திய கார், காசோலைகள், 50 மொபைல் போன்கள், சிம் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள், பாஸ் போர்ட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.