districts

img

மழைநீரை ஈசா ஏரிக்குள் திருப்பிவிட வேண்டும் : சிபிஎம் வலியுறுத்தல்

திருவள்ளூர், டிச. 2- திருநின்றவூர் நகராட்சி பகுதிகளில் தேங்கும் மழைநீரை, ஈசா ஏரிக்கு குழாய்கள் மூலம் திருப்பிவிட வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட,   14, 15, 16, மற்றும் 17 ஆகிய நான்கு வார்டுகளில் குறிப்பாக திருவள்ளுவர் 2 மற்றும் 3 வது தெரு, 8 வது  தெரு, பாரதிதாசன் தெரு, அண்ணா தெரு, பவானி அம்மன் கோயில் தெரு, செங்குட்டுவன் தெரு, முத்தமிழ் நகர்,  பாண்டியன் தெரு, கரிகாலன் தெரு, ஆகிய இடங்களில் கனமழையால் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழையின் போது ஏராளமான வீடுகளை மழைநீர் சூழ்ந்துக் கொள்வதும், முகாம்களில் தங்கவைத்து உணவு வழங்குவது வாடிக்கையாக உள்ளது. இதிலிருந்து நிரந்தரமாக விடுபட மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் டி.பச்சையம்மாள் தெரிவிக்கையில், திருநின்றவூர் பகுதியில் குடியிருப்புகள் அருகில் தாழ்வான  பகுதியில் பள்ளங்களை எடுத்து தேங்கும் மழைநீரை, ஈசா ஏரிக்குள் குழாய்கள் மூலம் வெளியேற்றுவது தான்,  தற்போது தீர்வு இருக்க முடியும். அப்படி செய்வதன் மூலம்  நூற்றுக்கணக்கான  குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை விரைவில் அகற்ற முடியும்.தேவையற்ற நிதிவிரையத்தையும் கட்டுப்படுத்தலாம். வெள்ள நீர் சூழ்ந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில்  மின் சாதன பொருட்கள், இருசக்கர வாகனங்கள் பழுதடைந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும், ஈசா ஏரியை தூர்வார வேண்டும்,  போதிய அளவிற்கு நிதி ஒதுக்கி திட்ட அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். துணை முதல்வர் நேரில் ஆய்வு கடந்த மாதம் பெய்த மழையின் போதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதை அறிந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். வெள்ளநீர் வெளியேற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து விட்டு சென்றார். இருப்பினும் அதிகாரிகள் நிரந்தர தீர்வு காணாமல் உள்ளனர் என பச்சையம்மாள் தெரிவித்துள்ளார்.