புதுச்சேரி,ஆக.3- எல்லைகள் தாண்டி நேசிக்க வைப்பது சிறந்த திரைப்படங்களே என உலக திரைப்பட விழாவில் புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசினார். புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ், தமுஎகச புதுச்சேரி திரைப்பட இயக்கம் ஆகியைவை சார்பில் உலக திரைப்படத் திருவிழா, அலையன்ஸ் பிரான்சிஸ் திரையரங்கில் வெள்ளியன்று (ஆக.2) துவங்கியது. விழாவிற்கு அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் டாக்டர் நல்லாம் சதீஷ் தலைமை தாங்கினார். பாரடைஸ் திரைப்படத்தை இயக்கிய சர்வதேச புகழ் பெற்ற இலங்கையைச் சேர்ந்த பிரசன்ன விதனகே மேளம் வாசித்து விழாவை தொடங்கி வைத்தார். புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- எந்தவொரு குறுகிய எண்ணமும் இல்லாமல், நாம் வளர்வதற்கான எந்த தடை இருந்தாலும், அதனை மாற்றுவதற்கான, எல்லாவற்றையும் ஏற்று ரசிக்கக்கூடிய தத்துவமும் இன்றைக்கு தேவைப்படுவதால் சிறந்த படங்களை பார்த்து நமக்குள் இருக்கின்ற சிறு வேறுபாடுகளை மாற்றிக்கொள்ளும் எண்ணம் நமக்கு வரும். நம்மை மகிழ்விக்கும், வியாபார நோக்கத்துக்கான திரைப்படங்களைத்தான் நாம் தினந்தோறும் பார்க்கின்றோம். அவை நம்முடைய மூளையை சலவை செய்திருக்கும். அறிவு வெளிச்சத்தை கொடுக்கின்ற திரைப்படங்கள் உலகில் பல இருக்கின்றன. பல படங்கள் நம் மனதை உருக்கும்படியும், மனதை மாற்றும் வகையிலும் அமைந்துள்ளன. எல்லாவிதத்திலும் நம்மை நாமே மாற்றிக்கொள்ளும் ஒரு சக்தி திரைப்படங்களில் இருக்கிறது. வியாபாரம், பணம் சம்பாதித்தல் போன்வைகளை தாண்டி இலக்கிய நயம், புரட்சிக்கரமாக சிந்திக்கக்கூடியவை, ஒடுக்கப்பட்டவர்கள், அடக்குமுறையில் இருப்பவர்கள், தங்களது கருத்தை உயர்த்தி சொல்ல முடியாதவர்கள் என எல்லோருக்கும் உத்வேகத்தை கொடுக்க நம்முடைய சிந்தனை நேர்மையானதாக இருக்க சிறந்த திரைப்படங்கள் அமைகின்றன என்றார். விழாவில் புதுச்சேரி தலைமைச் செயலாளர் சரத் சவுகான், அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் லாரன்ஸ் ஜலிக்கஸ், திரை இயக்குநர் எம்.சிவக்குமார், எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், மதுக்கூர் ராமலிங்கம், விழா ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், தமுஎகச துணைப்பொதுச் செயலாளர் களப்பிரன், எழுத்தாளர்கள் தமிழ்மணி, கலியமூர்த்தி, உமா அமர்நாத், அருண்குமார், பச்சையம்மாள், அன்பழகன், திரை இயக்க செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் செல்வம் உட்பட தமிழகம்,புதுச்சேரியை சேர்ந்த இளம் திரை இயக்குநர்கள் பலர் விழாவில் பங்கேற்றனர். 3 நாட்கள் நடைபெறும் விழாவில் இந்தியா, பிரான்ஸ், இலங்கை, துருக்கி, ஈரான், அமெரிக்கா, ஸ்வீடன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படஉள்ளது. முன்னதாக துவக்க நிகழ்ச்சியாக இளம் திரை இயக்குநர்கள் பங்கேற்ற பேரணி மேளதாளம் முழங்க நடைபெற்றது.