புதுச்சேரி,ஆக.9- புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் அரசே நேரடியாக வழங்க வேண்டும், 2024 ஆம் ஆண்டுக்கு பிறகு பணி நிரந்தரம் பெற்ற ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடைகள் அரசு உடனடியாக வழங்க வேண்டும். பணிக்காலத்தில் இறந்த ஊழியர்களுக்கு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு ஒரு முறை தளர்வு செய்து கருணை அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (ஆக.9) முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் கவுரவத் தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் ஆனந்த கணபதி, கிறிஸ்டோபர், நமச்சிவாயம், ஆனந்தராஜ், சகாயராஜ், பாலமுருகன் உள்ளிட்ட திரளான நகராட்சி, பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக மாதா கோவில் வீதியில் இருந்து ஊர்வலமாக வந்தவர்களை காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.