சென்னை,ஜூலை 19 - கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி கடந்த 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் பள்ளி சூறையாடப்பட்டு பள்ளியில் இருந்த கல்வி சான்றிதழ்கள், வாகனங்களுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்தனர். வன்முறையாளர்களின் தாக்குதலில் சுமார் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சுமார் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இது தவிர சமூக வலைதளங்கள் மூலமாக வன்முறை தூண்டும் வகையில் வதந்தி பரப்பியதற்காக இதுவரை 10க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வாட்ஸ் குழு அமைத்து வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக கூறி சென்னையை சேர்ந்த 4 மாணவர்களை அண்ணாசாலை மற்றும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.