கடலூர், ஆக.8- கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு குறுவை நெல் சாகுபடி அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அறுவடை செய்த நெல் மூட்டைகள் அரசின் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. அவசர கதியில் திறந்துவிட்டார். இதனால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, சேதமடைந்து வருவதால், விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். விருத்தாச்சலம் அடுத்துள்ள ஆலிச்சிகுடி கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் விவசாயிகள் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். புதனன்று (ஆக.8) கனமழையால், நேரடி நெல் கொள்முதல் நிலையம் சேரும் சகதியுமாக மாறியது. மழைநீர் வெளியே செல்ல வழியில்லாமல் நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமானது. தொடர்ச்சியாக 15 நாட்கள் கொள்முதல் செய்யவில்லை. இதனால், 1000 த்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைப்புத் தன்மை ஏற்பட்டு வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.