பூந்தமல்லி,ஜூன் 7- பூந்தமல்லி அருகே தேர்வில் மதிப்பெண் குறைவாக கிடைக்கும் என கடிதம் எழுதிவைத்துவிட்டு 10ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, நடராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகன் சதீஷ் (16). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் பொதுத்தேர்வு எழுதியுள்ள நிலையில் திங்களன்று இரவு வழக்கம்போல் படுக்கையறைக்கு சென்ற சதீஷ் நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. செவ்வாயன்று காலை வரை வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது சதீஷ் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சிய டைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, தற்கொலைக்கு முன்பு சதீஷ் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், ‘10ம் வகுப்பு பொது தேர்வில் எனக்கு மதிப்பெண் குறைவாகதான் கிடைக்கும். எனக்கு படிக்க விருப்பமில்லை. எனது படிப்புக்காக செலவு செய்து சிரமப்பட்டு வருகிறீர்கள். இது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என குறிப்பிடப்பட்டு இருந்ததாக காவல்துறை யினர் தெரிவித்தனர். மேலும் படிக்க விருப்பமில்லாமல் தற்கொலை செய்தாரா? அல்லது பள்ளியில் ஏதாவது பிரச்னையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.