சென்னை, ஏப். 6- ராயபுரம் அரசு மருத்துவமனையில் 200 படுக்கை வசதி கொண்ட புதிய 4 மாடிக் கட்டிடம் விரைவில் கட்டப்பட்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். வடசென்னை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு உதயநிதி ஸ்டாலின் ராய புரத்தில் சனிக்கிழமை (ஏப். 6) பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், கடும் நிதி நெருக்கடியிலும் திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அமல்படுத்தியது. 3 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ள புதுமைப் பெண் திட்டம், ஏழை மாணவர்களின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டித் திட்டம் இப்படி பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு அமல்படுத்தியுள்ளது. வடசென்னையில் செய்த பணிகள் வடசென்னையில் 171 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கி வைக்கப்படுள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 30 அறுவை சிகிச்சை மையங்கள் இருந்தன. தற்போது 60 அறுவை சிகிச்சை மையங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளன. 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் விரைவில் பயனாளிகளுக்கு வழங்கப்படும். செட்டித் தோட்டத்தில் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 240 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. 306 கோடி ரூபாயில் 17 பணிகள் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ராயபுரம் பகுதியில் மட்டும் 306 கோடி ரூபாயில் 17 பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 152 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்டான்லி மருத்துவமனையில் புதிய பல்நோக்கு மருத்துவ பிரிவு, செவிலியர் பயிற்சி மையம் மற்றும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. வாக்குறுதிகள் ராயபுரத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உந்து நிலையம் (பம்பிங் ஸ்டேஷன்) அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும். போத்திராஜன் நகர் சுரங்கப்பாதை அமைக்கும் பணி 80 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். வடசென்னையில் மாசு கட்டுப்பாடு வாரியம் அமைக்கப்படும். 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராயபுரம் அரசு மருத்துவமனையில் 200 படுக்கை வசதி கொண்ட புதிய 4 மாடிக் கட்டிடம் விரைவில் கட்டப்பட்டும். தேர்தல் முடிந்தவுடன் பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். இப்படி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். விரைவில் மேலும் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டும் என்று அமைச்சர் கூறினார். எனவே உங்கள் வேட்பாளர் கலாநிதி வீராசாமியை லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, ஜே.ஜே.எபிநேசர், ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர், மேயர் ஆர்.பிரியா, காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ஜெ.டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி, மதிமுக மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர், திருவொற்றியூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளிலும் அமைச்சர் பிரச்சாரம் செய்தார்.
‘‘தமிழ்நாட்டிற்கு வேட்டு வைக்கும் ஒன்றிய மோடி அரசுக்கு இந்த தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் வேட்டு வைப்பார்கள். அப்படி மோடி ஆட்சிக்கு வேட்டு வைப்பதின் மூலம் தான் மாநில நிதி உரிமையை பெற முடியும். அப்படி முழுமையாக மாநிலத்திற்கு நிதி கிடைத்தால் மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.’’