districts

img

மக்கள் கருத்துகேட்டு வள்ளலார் சர்வதேச மையம்

கடலூர், ஏப்.11- வள்ளலார் சர்வதேச மையம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்துள்ளார். கடலூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வியாழனன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பார்வதிபுரத்தில் அவர் பேசுகையில், வள்ளலார் புகழ் உலக அளவில் பரப்பப்படவேண்டும் என்பதே எல்லோரது ஆசை. இந்த சர்வதேச மையத்தில் உலகின் பலநாடுகளிலிருந்து அறிஞர்கள்,கவிஞர்கள் இங்கு வந்து தங்கி வள்ளலார் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வார்கள். பார்வதிபுரம் மக்கள் தான் இந்த நிலத்தை கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிலத்தை கொடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல எனவே பொதுமக்களின் கருத்துக்களை கேட்ட பின்னரே பணிகள் நடைபெறும். மேலும் வடலூரும் கடலூராக மாறும் என்ற வள்ளலாரின் கருத்தை தான் தற்பொழுது உண்மையாகிக் கொண்டி ருக்கிறோம். உலக அளவில் இருந்து இளை ஞர்கள் ஆராய்ச்சியாளர்கள் என அனைவரும் இங்கு வந்து ஆய்வு செய்வார்கள். வள்ளலாரின் புகழ் ஓங்கும் என்பதற்காக தான் சர்வதேச மையத்தை தமிழக அரசு அமைப்பதற்கு திட்ட மிட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் சீசனுக்கு சீசன் கட்சி மாறுபவர்கள் கொள்கை இல்லாதவர்கள் கூறுவதை நீங்கள் புறந்தள்ளுங்கள். இங்குள்ள சத்திய ஞான சபைக்கு முன் மண்டபத்தை கட்டியதே திமுக அரசு தான் என்றார். 1996 ஆம் ஆண்டு இந்த பகுதி நிலத்தை பலர் ஆக்கிரமித்த நிலையில் இந்த சத்திய ஞான சபையை சுற்றியுள்ள ஆக்கிர மிப்பு அனைத்தையும் அகற்றி அதனை சுவர் கட்டி காப்பாற்றியுள்ளோம். நிலத்தை காப்பாற்றிய திமுக அரசுக்கு உங்களை காப்பாற்ற தெரியாதா? மக்களை காப்பாற்ற தெரியாதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த பிரச்சாரத்தில் திக மாநில பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன், சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், சிபிஐ மாவட்ட செயலாளர் துரை மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமாக கலந்து கொண்டனர். முன்னதாக மேட்டுக்குப்பம், கருங்குழி, நயினார்குப்பம், பார்வதிபுரம், வடலூர் சபை உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் எம்.கே.விஷ்ணு பிரசாத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.