districts

img

சுவாமி சகஜானந்தா 134 வது பிறந்தநாள் விழா

சிதம்பரம், ஜன. 27- சிதம்பரத்தில் கடந்த 100 ஆண்டு களுக்கு முன்பு அனைத்து சமுதாய மக்களும்  கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்ற உயரிய நோக்கில் நந்தனார் பெயரில் இரு பாலருக்கும் மேல்நிலைப் பள்ளிகள் தொடக்கப் பள்ளிகள் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்டவைகளை அமைத்தவர் சுவாமி சகஜானந்தா. அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் சட்டம் மேலவை உறுப்பினராகவும் 35 ஆண்டுகளுக்குமேல்  பணியாற்றியுள்ளார்.  அனைத்து மக்களும் ஆலயத்திற்குள் சென்று வழிபட வேண்டும் எனறு அவர் நடத்திய தொடர் போராட்டங்களால் கடந்த  1947 ஆம் ஆண்டு அனைவரும் ஆலயத்திற்கு  சென்று வழிபடலாம் என்ற சட்டம் நிறைவேறியது.   விளிம்புநிலை மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டவர். இவரின் நினைவை போற்றும்  வகையில் சிதம்பரம் நந்தனார் ஆண்கள் பள்ளிவாசலில் அவர் வாழ்ந்த இடத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை, சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன், மதிமுக  துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்  அருண் தம்புராஜ், கூடுதல் ஆட்சியர்  சரண்யா, மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ராஜாராம், சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மி ராணி, வட்டாட்சியர் செல்வகுமார், சகஜானந்தா பணி நிறைவு பெற்றோர் சமூக  அறக்கட்டளை நிர்வாகிகள் ராதா கிருஷ்ணன், பாலைய்யா, விமல் குமார், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் மாநில துணைத் தலைவர் மூசா, சிதம்பரம் நகர செயலாளர் ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். சுவாமி ஏ.எஸ் சகஜானந்தர் பணி நிறைவு பெற்றோர் சமூக அறக்கட்டளை சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.