districts

சென்னை முக்கிய செய்திகள்

இரவு நேரத்தில் கடைகளை  மூடச்சொல்லி நிர்ப்பந்திக்கக் கூடாது காவல்துறையினருக்கு வணிகர் சங்கப் பேரவை வேண்டுகோள்

சென்னை, ஜன. 13- இரவு நேரத்தில் கடைகளை மூடச்சொல்லி காவல் துறையினர் நிர்ப்பந்த்தப்படுத்துவதை கைவிடக் கோரி காவல்துறை தலைமை இயக்குநரை சந்தித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், இந்தியா முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் திறந்து இருக்க லாம் ஒன்றிய அரசு 2018இல் உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை 2.6.2022 அன்று  அரசாணை 61  மூலம் 24 மணி நேரமும் கடைகள் திறந்து இருக்கலாம் என உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. மேலும் இது சம்பந்தமாக உயர்நீதி மன்றத்தில், நீதி பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவிலும் காவல்துறையினர் கடைகளை மூடச் சொல்லி நிர்பந்திக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அசாதாரண சூழ்நிலை யில், சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த கடைகளை மூட சொல்லலாமே தவிர, சகஜ நிலையில் உள்ள ஊர்களில் கடை களை மூடச் சொல்வது, அரசு உத்தர வுக்கும் நீதிமன்ற உத்தரவுக்கும் எதிரானது. தற்போது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 6.1.2025 முதல், இரவு 11 மணிக்கு மேல் கடைகள் திறந்து இருக்கக் கூடாது, என உத்தரவு பிறப்பித்து கடைகளை மூடச் சொல்லி நிர்பந்திக்கிறார். ஆனால் நாகர்கோயில் நகராட்சியால் கோட்டார், அப்ட்டா மார்கெட் பகுதிகளில் பகலில் கனரக வாக னங்களில் பொருட்கள் ஏற்ற இறக்க தடை உள்ளது. இரவு நேரத்தில்தான் பொருட்களை ஏற்ற, இறக்க முடியும். அதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் வணிகர்கள், காவல்துறையினர் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது, எனவே காவல்துறை தலைமை இயக்குநர் உடனே தலையிட்டு அரசின் உத்தரவையும், நீதிமன்ற உத்தரவையும் அமல்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

போகி புகைமூட்டத்தால் விமானசேவை பாதிப்பு

சென்னை, ஜன. 13- சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டத்தால் ஏற்பட்ட புகை மூட்டத்தின் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. போகி அன்று பழைய பொருட்களை எரிப்பதால் கடுமையான மாசு ஏற்படுவது வழக்கம். மாசுபாடு புதிய உச்சத்தை அடையும். தமிழ்நாடு முழுக்க திங்களன்று பழைய பொருட்ளை எரித்து போகி பண்டிகையை மக்கள் கொண்டாடினர் .இதனால் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. சென்னையில் பல பகுதிகளின் காற்றுத் தரச் சுட்டெண் (AQI) இங்கே தரப்பட்டுள்ளது. இதில் ராயபுரத்தில் மதிப்பு 200ஐ தாண்டி மோசமான நிலையை அடைந்தது. இந்நிலையில், போகி பண்டிகை புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கையாக சென்னையில் இருந்து ஜன.13 அன்று காலை புறப்பட வேண்டிய 30க்கும் மேற்பட்ட புறப்பாடு மற்றும் வருகை விமானங்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தில்லி, பெங்களூரில் இருந்து திங்களன்று அதிகாலை சென்னை வர வேண்டிய 3 பயணிகள் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமான நேரம் மாற்றங்கள் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.

பெண்ணுக்கு பாலியல்  தொல்லை: வாலிபர் கைது

சென்னை, ஜன. 13– கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் செய்யப்பட்டார்.  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வாலிபர் ஒருவர் இரவில் தங்கி இருந்தார். மதுபோதையில் இருந்த அந்த வாலிபர், திடீரென மருத்துவமனையின் மகளிர் நோயாளிகள் பிரிவுக்குள் புகுந்தார். அங்கு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 50வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கத்தி கூச்சலிட்டார். பெண்ணில் அலறல் சத்தம் கேட்டு திரண்ட நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.  இதையடுத்து அந்த வாலிபர் மீது மகளிர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் (வயது 28) என்பதும், வேலை தேடி சென்னை வந்த நிலையில், அவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.

இந்திய இயந்திர கருவி  உற்பத்தியாளர்கள் சங்க கண்காட்சி

சென்னை, ஜன.13- இந்திய இயந்திர கருவி உற்பத்தியாளர்கள் சங்கம் (இம்டெக்ஸ்) மாநாடு மற்றும் கண்காட்சி 2025 ஜனவரி 23 ஆம் தேதி முதல் 29  வரை பெங்களூருவில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில்  நடைபெறவுள்ளது. டூல்டெக் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொடர்பாக உலகின் முன்னணி இயந்திர கருவி மற்றும் உற்பத்தி தொழில்நுட்ப நிகழ்ச்சிகளில் ஒன்றாக இம்டெக்ஸ் திகழ்கிறது. தொழில் வல்லுநர்களுடன் தொடர்பு கொள்ளவும், அறிவைப் பெறவும் மற்றும் புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறியவும் இந்த  கண்காட்சி பயன்படும். இந்நிகழ்ச்சி தொழில்துறை தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு ஒரு வித்தியாசமான வாய்ப்பை வழங்கும்.  இயந்திர கருவி துறையில் புதிய முன்னேற்றங்களை காணமுடியும். 90,000 சதுர மீட்டர் பரப்பளவுடன் 8 அரங்குகளில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் 23 நாடுகளிலிருந்து 1,100 க்கும் அதிகமானோர் தங்களது அரங்குகளை அமைக்க உள்ளனர். அவர்கள் இயந்தி ரங்கள், புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ள னர். மேலும் இயந்திர கருவிகள் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்த உள்ளனர்.

பொங்கல் பண்டிகை: விடுமுறை நேர அட்டவணைப் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்

சென்னை, ஜன. 13- பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 14 (செவ்வாய்க் கிழமை), 15 (புதன்கிழமை) மற்றும் 16 (வியாழக்கிழமை) ஆகிய தேதி களில் ஞாயிறு, விடுமுறை நேர அட்டவணைப் படியும், 17ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சனிக்கிழமை அட்டவணைப் படியும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடை வெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடை வெளியிலும் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும்,  காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடை வெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

சென்னையில் 440 கிலோ  குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை, ஜன. 13- புனித தோமையார் மலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஆலந்தூர், இன்னர் ரிங் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி விசாரணை செய்த போது காரில் வந்த 2 நபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். மேலும் காரை சோதனை செய்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அதன்பேரில், புனித தோமையர் மலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த சம்சுதீன் (34), ராஜஸ்தானைச் சேர்ந்த பீரு ஷாஹா (26), ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 440.08 கிலோ கிராம் எடை கொண்ட குட்கா புகையிலை பொருட்கள், 4 செல்போன்கள் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அசரென்கா அதிர்ச்சி தோல்வி

சிட்னி, ஜன.13- 2025ஆம் ஆண்டின் முதல் மற்றும் 113 ஆண்டுகால ஆஸ்திரேலிய ஒபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் 2 முறை ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் பட்டம் வென்ற பெலாரசின் அசரென்கா (தரவரிசை 21), தரவரிசையில் இல்லாத இத்தாலியின் லூசியாவை எதிர் கொண்டார். எதிர்பாராத வகையில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லூசியா 6-2, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அசரென்காவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். அதிர்ச்சி தோல்வியுடன் அச ரென்கா ஆஸ்திரேலிய ஒபன் தொடரில் இருந்து வெளியேறினார். 2ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீராங்கனைகள்: ஸ்வியாடெக் (போலந்து), கவுப் (அமெரிக்கா), முச்சோவா (செக்கு டியரசு), மார்டன்ஸ் (பெல்ஜியம்), கோஸ்டிக் (உக்ரைன்), பெகுலா (அமெரிக்கா), சுவிட்டோலினா (உக்ரைன்),  ஜோகோவிச் கடும் போராட்டம் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் பசவ ரெட்டியை எதிர்கொண்டார். இந்திய வம்சாவளி அமெரிக்கரான பசவரெட்டியிடம் தொடக்கம் முதலே மிக மோசமான அளவில் திணறினார். ஆட்டநேர முடிவில் 4-6, 6-3, 6-4, 6-2 என்ற செட்கணக்கில் கடுமையான போராட்டத்துடன் ஜோகோவிச் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

புதுச்சேரி முதல்வர் பொங்கல் வாழ்த்து

புதுச்சேரி, ஜன.13-  புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பொங்கல்  வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், உழவின் சிறப்பும், குடும்ப உறவுகளின் மாண்பையும் போற்றும் வகையில் வேளாண்மை, அதற்கு ஆதாரமாக விளங்கும் இயற்கை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஒன்றிணைத்து கொண்டாடப்படும் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை, பொங்கல் பண்டிகையாகும் . தமிழர்களின் வாழ்வியல் அம்சங்களை அங்கமாகக் கொண்ட பொங்கல் பண்டிகையின் வாயிலாக இயற்கை வளங்களைப் போற்றி, நம் முன்னோர்களுக்கு நன்றியை வெளிப்படுத்துவதோடு, எதிர்கால சந்ததியினருக்கும் நமது பாரம்பரியத்தை கொண்டு செல்கிறோம்  என்று கூறியுள்ளார்.

 கோயம்பேடு – ஆவடி மெட்ரோ  பட்டாபிராம் வரை நீட்டிக்க ஆய்வு

சென்னை, ஜன.13- கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் திட்டத்தை பட்டா பிராம் வரை நீட்டிப்பதற்கானஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தில் மாத வரம் – சோழிங்கநல்லூர்வரையிலான வழித்தடத்தை கோயம்பேடு வழியாக ஆவடி வரை நீட்டிப்பது குறித்த ஆய்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  இந்நிலையில் இந்த வழித்தடத்தை பட்டாபிராம் வரை  நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோயம்பேடு முதல் ஆவடி வரை தோராயமான  சீரமைப்பு நீளம் 16.1 கி.மீ. ஆகும். இது பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட்டால் கிட்டத்தட்ட 20 கி.மீட்டராக அதிகரிக்கும். இதற்கு ரூ.6,500 கோடி மதிப்பிலான கட்டுமானச் செலவு ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான நீளத்தில் சுமார் 15 உயர்த்தப்பட்ட நிலையங்கள் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளன. இதற்கான மெட்ரோ நிலையம், ஆவடியில் அல்லது பட்டாபிராமில் உள்ள வெளிவட்டச் சாலையில் அருகே உள்ள காலி இடத்தில் கட்டப்படும் என்று கூறப் படுகிறது. கோயம்பேடு, பாடி புதுநகர், வாவின், அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம், அம்பத்தூர் ரயில் நிலையம், திருமுல்லைவாயில், ஆவடி ரயில் நிலையம் மற்றும் திருமங்கலம் அல்லது முகப்பேரில் ரயில் நிலை யங்கள் அமைக்கப்படலாம் என்றும் தகவல் வெளி யாகியுள்ளது.

சென்னையில் 3 இடங்களில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை, ஜன. 13- போகி பண்டிகையையொட்டி சென்னையில் மூன்று இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. பொங்கலுக்கு முந்தைய நாளான திங்களன்று (ஜன. 13) போகிப்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக சென்னை மாநகர், புறநகர் பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளித்தது. ஏற்கெனவே பனிப்பொழிவு இருக்கும் நிலையில், தற்போது புகைமூட்டமும் சேர்ந்ததால் வாகன ஓட்டிகள் சிரமம்அடைந்தனர். இதனால் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். போகியை யொட்டி டயர், டியூப் போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஏற்கெனவே அறிவித்திருந்த போதிலும், அதனை கண்டு கொள்ளாமல் டயர், டியூப் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை எரித்ததால் காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பெருங்குடியில் 289, மணலியில் 272, எண்ணூரில் 232, அரும்பாக்கத்தில் 216, ராயபுரத்தில் 207 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 136, கடலூரில் 106, கும்மிடிப்பூண்டியில் 131, ராணிப்பேட்டையில் 130, வேலூரில் 127, விருதுநகரில் 111 என்ற மிதமான அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது.

நெரிசல் மிக்க நகரங்களில்  சென்னைக்கு 31ஆவது இடம்

சென்னை,ஜன.13- டாம்டாம் தனியார் நிறுவனம் வெளியிட்ட 2024ம் ஆண்டின்உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் கொல்கத்தா 2-ம் இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பெங்களூரு, புனே ஆகிய நகரங்கள் முறையே 3 மற்றும் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது. கொல்கத்தாவின் சராசரி வேகம் மணிக்கு 17.4 கிமீ ஆகும். கொல்கத்தாவில் 10 கி.மீ-ஐ கடக்க 34 நிமிடங்கள் 33 நொடிகள் தேவைப்படுகிறது. பெங்களூருவில் 10 கி.மீ-ஐ கடக்க 34 நிமிடங்கள் 10  வினாடிகள் தேவைப்படுகிறது. புனேவில் 10 கி.மீ-ஐ கடக்க  33 நிமிடங்கள் 22 வினாடிகள் தேவைப்படுகிறது உலக அளவிலான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் ஐதராபாத் 18 ஆம் இடத்திலும் சென்னை31 இடத்திலும் உள்ளது. சென்னையில் 10  கி.மீ-ஐ கடக்க 30 நிமிடங்கள் 20 வினாடிகள் தேவைப் படுகிறது.

 கோயம்பேடு சிறப்பு சந்தைக்கு கரும்பு வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது

சென்னை,ஜன.13- தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக இருப்பது பொங்கல் பண்டிகை, தை ஒன்றாம் தேதி ஆண்டு தோறும் வெகு விமர்சையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் கோயம்பேடு மார்க்கெட்டில் 10 நாட்கள் சிறப்பு சந்தை போடப்படுவது வழக்கம்.  மூன்று ஏக்கர் பரப்பளவில் சிறப்பு சந்தை நடத்த அங்காடி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த ஜனவரி 9 தேதி நள்ளிரவு  முதல் சிறப்பு சந்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனவரி 16ஆம் தேதி வரை சிறப்பு சந்தை நடைபெறும். இதற்கான பணிகளை அங்காடி நிர்வாகம் செய்தனர். இந்த சிறப்பு சந்தையில் மஞ்சள் கொத்து, கரும்பு, இஞ்சி  கொத்து மற்றும் வாழை, மண்பானை, வாழை இலை, உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.சிறப்பு சந்தையில் அதிகளவு கரும்பு மற்றும் மஞ்சள் வரத்து காணப்பட்டதால் விலை குறைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாகிகள் கூறுகை யில், ஆண்டுதோறும் போடப்படும் சிறப்பு சந்தையில் மக்கள் சிரமம் இன்றி பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்லலாம். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு சந்தையில் அதிகளவு கரும்பு மற்றும் மஞ்சள் வரத்து காணப் பட்டதால் விலை குறைந்துள்ளது என்றனர்.