சென்னை, பிப்.22- பாலியல் புகாருக்கு உள்ளான கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியரை உடனே பணியில் இருந்து நீக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி ஒன்றிய கலாச்சார துறையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. கடந்தாண்டு கலாஷேத்ரா நிறுவனத்தின் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இதனிடையே அங்கு படிக்கும் மாணவிகள் பேராசிரியர்கள் மீது குற்றம் சாட்டி உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர். இதனால், கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிபதி கண்ணன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. பின்னர் சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி கண்ணன் விசாரணை குழுவில், அந்த அறக்கட்டளையின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் கல்லூரி மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கலாஷேத்ரா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில், பணியிடங்க ளில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், பல்கலைக் கழக மானிய குழு சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகளின் அடிப்படையில் பாலியல் தொல்லைகள் தடுக்க விரிவான கொள்கை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி அனிதா சுமந்த், கலாஷேத்ரா-வுக்கு எதிரான பாலியல் தொல்லை புகார் விரும்பத்தகாதது மட்டுமின்றி மிகவும் கவலைக்குரியது என குறிப்பிட்டுள்ளார். மேலும், சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமை யிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக் கும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, அந்த குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக உடனடி யாக பரிசீலிக்க வேண்டுமென்றும் அறக்கட்ட ளைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், புகாருக்கு உள்ளான பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.