districts

சென்னை முக்கிய செய்திகள்

எல்ஐசி முகவர்கள் சங்க தோழர் கஸ்தூரி காலமானார்

சென்னை, ஜன.29- எல்ஐசி அகில இந்திய முகவர்கள் சங்கம் சென்னை கோட்டம் 2-இன் முன்னாள் பொதுச் செயலாளரும், அண்ணாநகர் கிளையின் மூத்த முகவருமான தோழர் வி.கஸ்தூரி (79) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை (ஜன.28) காலமானார். இவர் டிவிஎஸ் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு எல்ஐசி முகவராகச் செயல்படத் தொடங்கினார். பின்னர் எல்ஐசி அகில இந்திய முகவர் சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். 2014-ஆம் ஆண்டு ஆயுள் காப்பீட்டு கழகத்தில் ஏற்பட்ட குறைந்தபட்ச வணிகம், சேவை வரி, 49 விழுக்காடு அந்நிய நேரடி மூலதனம், ஸ்வரூப் கமிட்டி போன்ற முகவர்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து எல்ஐசி அகில இந்திய முகவர் சங்கம் சார்பில் நடைபெற்ற தொடர் போராட்டங்களில் முகவர்களை அணிதிரட்டினார். கோட்டச் செயலாளராகத் திறம்பட செயல்பட்டார். சங்கத்திற்காக ஏராளமான உதவிகளையும் செய்தவர். பாடி டிவிஎஸ் காலனி 6-ஆவது தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம், பொருளாளர் கி.தாமோதரன், கோட்டத் தலைவர் வி.நாகலிங்கம், கோட்டப் பொதுச் செயலாளர் டி.கே.வெங்கடேசன், பொருளாளர் ஆர்.கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் புதன்கிழமை (ஜனவரி 29) பிற்பகல் வில்லிவாக்கத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ரூ.23.5 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்

சென்னை, ஜன.29- சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து கடந்த 26 ஆம் தேதி  கடத்திவரப்பட்ட ரூ.23.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு பெண்உட்பட 3 இந்திய பயணிகளால் கடத்தி வரப்பட்ட சுமார் 24 பாக்கெட்டுகளில்  மொத்தம் 23.48 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.23.5 கோடி என சுங்கத்துறை அதி காரிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. பின்னர்  3 பேரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து கஞ்சா பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

ஆக்கிரமிப்பு கடை அகற்றம்

சென்னை, ஜன.29- சென்னை அண்ணா சாலையில் வக்பு வாரிய இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை செவ்வா யன்று அகற்றப் பட்டது. சென்னை அண்ணா சாலையில் வக்பு வாரி யத்தில் பதிவு செய்யப் பட்டுள்ள ஹஜ்ரத் மூஸா ஷா காதரி தர்கா என்ற வக்பு வாரிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடையை  வக்பு வாரிய அதிகாரிகள் அகற்றினர்.

நடைபாதையில் கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்

சென்னை, ஜன.29- முத்தியால்பேட்டை சென் சேவியர் தெரு, பிடாரி அம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. இங்குள்ள நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து 50 ஆண்டு காலமாக 105 குடும்பத்தினர் வசித்து வந்தனர். போக்குவரத்திற்கு இடையூறாக இந்த வீடுகள் இருப்பதாக கூறி நீதிமன்ற உத்தரவின்பேரில் அகற்றப்பட்டது.

மார்ச் 24 புதுச்சேரி நகராட்சி  விற்பனை குழு உறுப்பினர்கள் தேர்தல்

புதுச்சேரி, ஜன. 29- புதுச்சேரி நகராட்சி தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் நகர விற்பனை குழுவிற்கான 12  உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்யும்  ஆலோசனை கூட்டம்  ஆணையர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் சிஐடியு மாநில தலைவர் பிரபுராஜ், சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகி வடிவேல் மற்றும் ஏஐடியுசி, தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.   இக்கூட்டத்தில் 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் நிரந்தர நகர விற்பனை குழுவிற்கான நடைபாதை வியாபாரிகள் 12 பேரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. விடுபட்ட நடைபாதை வியாபாரிகள் பெயர் பட்டியலில் 1,619 பேர் புதிதாக சேர்ப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் ஒரு வாரத்திற்குள் எழுத்து பூர்வமாக ஆட்சியபணைகள் தெரிவிக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே உழவர் நகராட்சிக்கு உட்பட்ட 12 பேர்கள் கொண்ட விற்பனை குழு  உறுப்பினர் தேர்வு செய்யும் தேர்தலில், 10 இடங்களை சிஐடியு கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

போலி ஆவணம்-பட்டா மாற்றம்: கிராம நிர்வாக அதிகாரி கைது

கள்ளக்குறிச்சி, ஜன.29 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் மரிய கிளாரா. இவரது தந்தையின் பெயரில் இருந்த சொத்தை அவரது உறவினர்கள் ஆரோக்கியம்மாள், ஆரோக்கியசாமி, ஜோசப் ராஜ்  ஆகிய மூன்று பேரும் போலியாக வாரிசு சான்று பெற்று கடந்த 2022 ஆம் ஆண்டு பட்டா மாற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக மரிய கிளாரா உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், அதன் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு பட்டா மாற்றியது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க எலவனாசூர்கோட்டை போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்த நிலையில் எலவனாசூர்கோட்டை போலீசார், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆரோக்கியம்மாள், ஆரோக்கியசாமி, ஜோசப் ராஜ் ஆகிய மூன்று பேரை கைது  செய்தனர். மேலும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கிராம நிர்வாக அலுவலர் அமர்நாத்தை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.