districts

img

போர்க்குணம் மிக்க சிறந்த அரசியல்வாதி யெச்சூரி

சென்னை, செப். 15 - போர்க்குணம் மிக்க சிறந்த அரசியல்வாதி சீத்தாராம் யெச்சூரி என்று சென்னையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி மறைவையொட்டி வெள்ளியன்று (செப்.13) கட்சியின் சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. இதன் நிறைவாக நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு: இந்தியா கூட்டணியை  உருவாக்கியவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குறிப்பிடுகையில், “எல்லா சீத்தாராமன்களையும் வென்றெடுக் கிற ஆற்றலும் அறிவும் நேர்மை யும் கொண்டவர் சீத்தாராம் யெச்சூரி என்று அறிஞர்களால் புகழ்ந்துரைக்கப்பட்டவர். தேசத்தின் பாதுகாவலர், ஐடியா ஆப் இந்தியா என்று ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில் புகழ்ந்துரைத்துள்ளார்” என்றார். “மாநிலங்களவையில் 1.15 நிமிடம் பேசிய அவரது உரை வரலாற்று சிறப்புமிக்கது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர். பாசிசத்திற்கு எதிரான அனைத்து கட்சி தலைவர்களையும் திரட்டி இந்தியா கூட்டணியை உருவாக்கிய பெருமை அவரையே சாரும். அனைத்து தலைவர்களின் நன்மதிப்பையும் பெற்றவராக இருந்த அவர், எந்நேரமும் மக்க ளின் வாழ்க்கை மேம்பட சிந்தித்தார். அவரது சிந்தனைகள், பணிகள், எழுத்துக்கள் வாயிலாக என்றென்றும் அவர் வாழ்வார்” என்றும் கூறினார்.

பி.சம்பத்

கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் பி.சம்பத் பேசுகையில், “யெச்சூரி மறைவு தேசம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் மிகப்பெரிய துயரத்தில் ஆழ்ந்துள்ளன. போர்க்குணம் மிக்க சிறந்த அரசியல்வாதி அவர். இடது சாரிகள், உழைப்பாளி மக்களின் முன்னேற்றத்திற்கு, தேசத்தின் ஜன நாயகம், ஒற்றுமை, மதச்சார் பின்மைக்கு ஆபத்து ஏற்படும்போது அதற்கெதிராக ஆத்மார்த்த உணர்வோடு செயல்பட்டார்.  “சோவியத் ரஷ்யா வீழ்ச்சியை ஆய்வு செய்து அவர் மாநாட்டில் சமர்ப்பித்த அறிக்கையை, ரஷ்யா கட்சி அங்கீகரித்து உள்வாங்கிக் கொண்டது. முதலாளித்துவ நாட்டில் ஜனநாயகம், மதச்சார் பின்மை தேவை என்பதை எடுத்துரைத்து மதச்சார்பற்ற ஜன நாயக சக்திகளை திரட்டினார்.

அறிவார்ந்த பாதையை வகுத்தவர்

கட்சியின் 23வது மாநாட்டில், வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான அனைத்து வாக்குகளையும் திரட்டுவது என்ற நிலையை எடுத்தது. அதற்கான அறிவார்ந்த பாதையை வகுப்பதில் யெச்சூரி யின் பங்கு சிறப்பானது. அதனால் தான் ஆளும் பாஜகவின் எண்ணிக்கை 234 ஆக குறைந்து, எதிர்க் கட்சிகளின் எண்ணிக்கை 240ஆக உயர்ந்தது” என்றும்  சம்பத் கூறினார். உ.வாசுகி மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி குறிப்பிடுகையில், “கடு மையான, சிரமமான அரசியல் பொருளாதார அம்சங்களை எளிமையாக யெச்சூரி மத்தியக்குழு வில் முன்வைப்பார். பாஜக, ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளை தனித்தனியாக பார்க்காமல் ஒன்று படுத்தி பார்க்க வேண்டும். கருத்துரிமை மீது அரசு தொடுக்கும் தாக்குதலை வெறும் தணிக்கையாக பார்க்க கூடாது. இந்துத்துவா நிகழ்ச்சி நிரலின் ஒருபகுதியாக தர்க்கம், பகுத்தறிவு, விவாதங்கள் போன்றவற்றின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாக பார்க்க வேண்டும் என்பார். முசோலினியின் பாசிஸ்ட் நீதி மன்றத்தில் பேசிய அரசு வழக்கறி ஞர்கள், அந்தோணியா கிராம்சியின் மூளையை 20 ஆண்டுகள் செயல்படாமல் முடக்கி வைக்க வேண்டும் என்றார். சிந்திப்பது பாசிஸ்டுகளுக்கு பிடிக்காது. அப்படிப்பட்ட பட்டியலில்தான் சீத்தாராம் யெச்சூரியின் சிந்தனையும், செயலாற்றலும், மூளையும் இருக்கிறது. அவர் விட்டுச்சென்ற பணிகளை விடாமல் தொடர்வோம்.” என்றார்.

அ.சவுந்தரராசன்

கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், “நாட்டின் ஜனநாயகத்திற்கு, விடுதலைப் போராட்டம் அறிவித்த விழுமியங்களை பாதுகாக்க துடித்து ஓடிக்கொண்டிருந்த உடல் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. இது இந்திய தேசத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்பு. சீத்தாராமின் உரைகள், எழுத்துக்களை மார்க்சிஸ்டு கள் அல்லாதவர்களும் போற்று கிறார்கள். இந்தியாவின் தன்மையை, அதன் பிரச்சனை களை துல்லியமாக எடுத்துரைத்து தீர்வு சொல்வதில் உள்ள அவரது நிபுணத்துவம்தான் அவரை போற்றுவதற்கு காரணம். காங்கிரசை இணைத்துக் கொண்டு மதவாதத்தை முறிய டிக்க வேண்டும் என்றார். அனைத்து நிலைகளிலும் அதற்கு பொருத்த மான மாற்றம் செய்தார். கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால், இறுதி முடிவுக்கு கட்டுப்படுகிற கம்யூனிஸ்ட்டாக இருந்தார். புராணம், இதிகாசம், வேதங்க ளில் இருந்து மேற்கோள்காட்டி மதவாதத்தை எதிர்த்து பேசுவது அவரது திறமை. அனைத்து தரப்பு எதிரிகளும் அமர்ந்துள்ள நாடாளுமன்றத்தில் ஒரு பிரச்ச னையை பேசுவது எளிதல்ல. அந்தக் கூட்டத்தில், பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் போது கூட, அந்த கட்சி உறுப்பினர்களால் தலையிட முடியாத வகையில் பேசுவார். கோபப்பட்டு தன்மை இழக்காமல், கருத்தில் வழுவாமல் பேசுவார். மார்க்சிசத்தை படித்தால் போதாது, கற்க வேண்டும். நுனிப்புல் மேயாமல் நுணுகி படிப்பார். அதனால்தான் தெளிந்த ஓடைபோல் அவரால் மார்க்சிசத்தை பயன்படுத்த முடிந்தது.இந்தச் சூழலில் சீத்தாராம் யெச்சூரியின் இடத்தை பல மூளைகள் சேர்ந்து ஈடுகட்டும்.” என்றார். இந்த நிகழ்வில் ஐக்கிய கம்யூ னிஸ்ட் கட்சியின் செயலாளர் பாஸ்கர், மார்க்சிஸ்ட் கட்சியின்  மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வசிங், என்.குணசேகரன், கே.கனகராஜ், எஸ்.கண்ணன், கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர்கள் ஜி.செல்வா (மத்திய சென்னை), எல்.சுந்தர ராஜன் (வடசென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை) உள்ளிட்டு நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.