சட்டமேதை டாக்டர் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து சட்ட கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஜனவரி 26 இயக்கம், வியாசை தோழர்கள் சனிக்கிழமையன்று (டிச.21) தாம்பரம் பேருந்து நிலையம் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சட்டக்கல்லூரி மாணவர்கள் திருமுருகன், வசிகரன், ஹரிஹரன், ஜனவரி இயக்க தலைவர் ஜாய், வியாசை தோழர்கள் சரத், பேரறிவாளன் ஆகியோர் பங்கேற்றனர்.
அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வெறுப்புணர்வு பேச்சைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருவொற்றியூரில் மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் எம்.ராஜ்குமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, பகுதிச் செயலாளர் தனலட்சுமி, சிபிஎம் பகுதிச் செயலாளர்கள் ஆர்.கருணாநிதி, எஸ்.கதிர்வேல், மாவட்ட துணைத் தலைவர் செம்மல் அபேதன் ஆகியோர் பேசினர்.