சிதம்பரம், ஜூலை 10- சிதம்பரம் நகரத்திலுள்ள விளங்கியம்மன்கோயில் தெருவில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் தொடக்கநிகழ்ச்சி நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதிமொழியை வாசித்து தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்களுக்கு, அமைச்சர் மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்தும் எடுத்துக் கூறி அதனை தனித்தனியாக வழங்க வேண்டும் எனக்கூறி இரு வண்ணங்களில் குப்பைகூடையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் உழவர் சந்தையில் ரூ. 5 கோடியில் அமைக்கப்படும் நவீன காய்கறி மார்கெட், அண்ணாகுளம் நடைபாதை அமைக்கும் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன், கோட்டாட்சியர் ரவி, வட்டாட்சியர் ஹரிதாஸ், நகர் மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வினா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.