வேலூர், டிச. 19 – பெண்கள் தங்களுக்கு உள்ள உரிமைகள் குறித்தும் சட்டங்கள் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம் என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி தெரிவித்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் உதவியுடன் விஐடியின் சமூக அறிவியல் மற்றும் மொழிகள் துறையின் சார்பில் விவசாயத்தில் பெண் தொழிலாளர்களின் சுகாதார பிரச்சனைகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதை தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி துவக்கி வைத்து பேசினார். அப்போது, விவசாயம் உட்பட பல்வேறு துறைகளில் வேலை செய்து வரும் பெண்களுக்கு பூச்சி மருந்து மற்றும் ரசாயனங்களால் உடல் நலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்றார், பல்வேறு சட்டங்கள் மூலம் பெண்களின் உரிமைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பாதுகாக்கின்றன. ஆனால், சட்டங்கள் மூலம் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்றும் கூறினார். பெண்கள் தங்களுக்கு பிரச்சனைகள் வரும்போது மகளிர் உதவி எண் 181 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்றும் தெரிவித்தார். விஐடி செயல் இயக்குநர் டாக்டர் சந்தியா பென்டா ரெட்டி பேசும்போது, விவசாயத்தில் பெண்களின் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அதனால் நாடும் வளர்ச்சியடைகிறது. நமது பெண்களின் உரிமைகளை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். இந்த கருத்தரங்கில் விஐடி இணை துணை வேந்தர் டாக்டர். பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டாக்டர். ஜெயபாரதி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.