districts

img

விவசாயிகளை வெளியேற்றும் முடிவை ரத்து செய்ய வலியுறுத்தல்

கடலூர், ஜன.7- 5 தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் மலையடிக்குப்பம் கிராம மக்களை வெளியேற்றும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் கொடுக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மலைஅடிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் 164 ஏக்கர் பரப்பளவு தரிசு நிலத்தை மேம்படுத்தி கரும்பு, முந்திரி, வாழை, மற்றும் பூஞ்செடிகள் சாகுபடி பயிர் செய்து  வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.  இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிர் செய்து வரும் சிறு, சிறு நிலப்பரப்பிற்கு பட்டா கேட்டு கடந்த 50 வருடங்களாக முயற்சி செய்து வருகின்றனர்.  கடந்த 2007 மற்றும் 2011 இல் முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தரிசு நிலங்களில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு நிலப்பட்ட வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  அதன் அடிப்படையில் இந்த கிராமத்தில் தரிசு நிலங்களில் பயிர் செய்த சிறு விவசாயிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை இல்லை.  இந்த சூழ்நிலையில் கடந்த 19.12.2024 அன்று வட்டாட்சியரால் அந்த  கிராம மக்களுக்கு நோட்டீஸ்  வழங்கப்பட்டது.  அதில் விவசாயிகள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பயன்படாத தரிசு நிலங்களை மேம்படுத்தி காலகாலமாக பயிர் செய்து வரும் விவசாயிகளின் சிறு, சிறு நிலப்பரப்பிற்கு பட்டா வழங்காமல் அவர்களை வெளியேற்றம் செய்யும் செயலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.  எனவே மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்சனையில் தலையிட்டு உரிய ஆய்வினை மேற்கொண்டு நிலத்தை விட்டு வெளியேற்றும் அரசின் முடிவை ரத்து செய்திட வேண்டும்  என வலியுறுத்தப்பட்டுள்ளது. சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி தலைமையில் சிபிஎம்  மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையின், ஜெ. ராஜேஷ் கண்ணன், விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.கே. சரவணன், தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன், நிர்வாகிகள் அய்யாதுரை, கலைவாணன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.