districts

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை,மே 22- சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 5ஆம் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 8ந் தேதி காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்று இரவே பூண்டி ஏரிக்கும் சென்றடைந்தது. பூண்டி ஏரிக்கு ஆரம்பத்தில் வினாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. அதன் பின்னர் இது படிப்படியாக அதிகரித்தது.  ஞாயிறன்று காலை வினாடிக்கு 610 கனஅடி வீதம் கிருஷ்ணா தண்ணீர் வந்தது. கிருஷ்ணா தண்ணீர் வரத்தை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இணைப்பு கால்வாய் வழியாக ஞாயிறன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 841 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீரை கூடுதலாக சேமிக்க முடியும். இதேபோல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு விநாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.ஞாயிறு நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 27.49 அடி ஆக இருந்தது. 1.227 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.