சென்னை,ஏப்.3- கொரோனா நோய் தொற்று பரவல் தற்போது குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வந்ததால் வெளி நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மட்டும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. உள்நாட்டு விமான சேவைகள் வழக்கம் போல் நடந்து வந்தது. இதற்கிடையே நோய் தொற்று பரவல் கட்டுப் பாட்டுக்குள் வந்ததையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 27-ந்தேதி முதல் வெளிநாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்தும் வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக சென்னையில் இருந்து விமானங்களில் பயணம் செய்யும் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. இதேபோல் குவைத், சார்ஜா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதையடுத்து சென்னையில் இருந்து இயக்கப்படும் வெளிநாட்டு விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏப்.3அன்று 68 வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. வரும் நாட்களில் வெளி நாட்டு பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் உள் நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் சென்னை விமான நிலையம் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.