காஞ்சிபுரம்,ஜூன் 17-
காஞ்சிபுரத்தில் அருகே ஏரியில் விதிமுறை மீறி 20 அடி வரை மணல் தோண்டி எடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
உத்திரமேரூர் அருகே உள்ள நெய்யாடிவாக்கம் ஏரியை தூர்வாருவதற்காக அங்கு மணல் அள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இங்கு விதிமுறை மீறி சுமார் 20 அடி வரை மணல் அள்ளப்படு வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் ஏராளமான லாரிகளில் உரிய அனுமதி இல்லாமல் இந்த மணல் அங்கிருந்து கொண்டு செல்லப்படுகிறது.
அதிவேகத்தில் செல்லும் மணல் லாரிகளால் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மணல் லாரிகள் வள்ளிமேடு, அவலூர், வாலாஜாபாத் பாலாற்று தரை பாலம் வழியாக செல்கின்றன.
தற்காலிக பாலம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள நிலையில், இது போன்ற கனரக வாகனங் களால் முற்றிலுமாக சேதம் அடையும் அபாயம் உள்ளது. நெய்யாடிவாக்கம், காவாந் தண்டலம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் புழுதி மற்றும் தூசுகளால் விளை நிலங்கள் கடும்பாதிப்பு ஏற்படுகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.