districts

img

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன்: நேத்ரா குமணன்!

“வெற்றி என்பது எதிலும் அவ்வளவு எளிதில்  கிடைத்துவிடாது. அதிலும், ஆண்கள்  மட்டும் சாதித்த காலம் மாறிவிட்டது. ஆண்களுக்கு சமமாக பெண்களும் சாதனை படைத்து வருகிறார்கள். ‘தடை,  அதை உடை’ என்பதை போல  26  வயதாகும் நேத்ராகுமணன், ஒலிம்பிக்  போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை படைத்துள்ளார்”. யார் இந்த நேத்ரா? ஆகஸ்ட் 21, 1997 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த நேத்ரா குமணன், 12 வயதில் (2009 ஆம் ஆண்டு) படகு ஓட்டும் விளையாட்டுப் பயணத்தில் அறிமுகமானார். அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற போது 16 வயது தான்.  வெளிநாட்டு வீரர்களுடன் விளை யாடிய அனுபவங்களால் 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப் பட்டார். அது முதல் தொடர் என்றா லும் மிகச் சிறப்பாக விளையாடி 19  வயதில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.  படகு ஓட்டும் போட்டியில் பதக்கம் வென்று கொடுத்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்த நேத்ராவின் தந்தை வி.சி. குமணன் ஒரு தொழிலதிபர். தாய் ஸ்ரீஜா மனித வள நிபுணர். இளைய சகோதரர் நவீன் குமணன் படகோட்டும் விளையாட்டு வீரர். ஆனால் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். நாட்டில் எத்தனையோ விளை யாட்டுக்கள் இருந்தாலும், இந்தி யாவை பொருத்தமட்டில் கிரிக்கெட் போன்ற ஒரு சில விளையாட்டுகள் தான் மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளது. பலருக்கும் பாய் மரப் படகு ஓட்டுவது ஒரு விளையாட்டு என்பதே தெரியவில்லை. அப்படி இருந்த நிலையில்தான், அந்த விளையாட்டில் ஈடுபடலானார் நேத்ரா. பாய்மரப் படகு விளையாட்டு என்பது காற்று, கடல் அலைகளின் நடுவே வீசும் காற்றின் விசைகளுக்கு ஏற்ப பாய்மரப் படகை கட்டுப்படுத்தி குறிப்பிட்ட திசை நோக்கி ஓடி பந்தயத்தில் இலக்கை அடைய வேண்டும். இது ஒலிம்பிக் விளை யாட்டுப் போட்டிகளில் ஒன்றாகும். கனவு நனவானது... சிறு வயது முதல் டென்னிஸ், கூடைப்பந்து, சைக்கிள் ஓட்டும் போட்டி களில் ஆர்வம் கொண்ட நேத்ரா, மற்ற விளையாட்டுகளை விடவும் வித்தியாசமாக இருந்ததால் சாதிக்க தேர்ந்தெடுத்தது பாய்மரப் படகு விளையாட்டைத் தான். ஒற்றை ஆளாக (தனிநபர்) படகை இயக்கும் பிரிவில் தன்னுடைய திறமைகளை மெருகேற்றிக் கொள்ள சிறப்பு பயிற்சிகள் தேவைப்பட்டது. இதற்காக அடிக்கடி வெளிநாடு செல்ல  வேண்டும் என்பதால் பள்ளிப் படிப்பை  தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் மனம் தளரவில்லை. பத்தாம் வகுப்புக்குப் பிறகு, வீட்டிலிருந்தே திறந்தவெளி கல்வி நிறுவனம் மூலம் படிப்பைத் தொடர்ந்து கொண்டு படகு ஓட்டும் விளையாட்டில் முழு கவனத்தையும் செலுத்தினார்.  பெற்றோரின் ஒத்துழைப்பும், அரவணைப்பும் முழுமையாகக் கிடைக்க  ஆரம்ப கட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவில் சுமார் இரண்டு ஆண்டு காலம் பயிற்சி எடுத்தார். இதற்காக, இரண்டு முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் கொண்ட ஹங்கேரி நாட்டின் தாமஸ் என்பவரை பயிற்சியாளராக தேர்வு செய்தார். ஆரம்பத்தில் தோல்விகள் என்றாலும்  துவண்டு போகவில்லை. வெகு சீக்கிரமே  வெற்றிக்கான ரகசியங்களை கற்றுத் தேர்ந்தார்.  பாய்மரப் படகு விளையாட்டில் இப்பொழுது தனி நபராக அசத்தி வரு கிறார். விளையாட்டுப் போட்டிகளுக்கு மத்தியில் படிப்பையும் தொடர்ந்தார். சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் பொறியியல், எம்பிஏ பட்டங் களையும் வெற்றிகரமாக முடித்தார். தடைகளைத் தாண்டிய நேத்ரா, 2021 ஆம் ஆண்டு  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று முதல்  இந்தியப் பெண்ணாக கனவை நனவாக்கினார். இது பல பெண்களின் வாழ்க்கையையே மாற்றும் வல்லமையை படைத்தது. சென்னை டூ பாரிஸ் !  பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ப தற்கான கடைசி தகுதிச்சுற்றுப் போட்டி சமீபத்தில் பிரான்சில்  நடைபெற்றது. இதில், நேத்ரா காட்டிய வீரம் அனைவரையும் பிரமிக்க வைத்தது. ஒட்டுமொத்த மாகப் புள்ளிகளைக்  குவித்து முதலிடம் பிடித்து வளர்ந்து வரும் நாடுகளுக்கான ஒதுக்கீட்டில் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு பெற்று சரித்திரம் படைத்திருக்கிறார். ஒலிம்பிக்கில் இரண்டாவது முறையாக பங்கேற்பது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமையாகும். பாய்மரப் படகு வரைபடத்தில் இந்தியா! பிரான்சிலிருந்து  நாடு திரும்பிய நேத்ராவுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்.30)சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “சர்வதேச பாய்மரப்படகு போட்டி வரைபடத்தில் இந்தியா இடம் பெற்றது மகிழ்ச்சி என்றும் இந்த முறை  முடிந்த அளவு சிறப்பாக விளையாடி பதக்கம் வெல்ல முயற்சிப்பேன் என்றும்”   நம்பிக்கை தெரிவித்தார். அவரது வெற்றிக்கு தமிழ்நாடு அரசும் முதல மைச்சரும் விளையாட்டுத் துறை அமைச்சரும்  தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர். சென்னையில் இருந்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் முதல் பெண்மணியான நேத்ரா, இந்த முறை வெற்றி வாகை சூடிட அனைவரும் வாழ்த்துவோம்!