சென்னை, மே 6 - காவல்நிலைய விசாரணையில் வாலிபர் விக்னேஷ் கொல்லப்பட்டது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏப்.18ந் தேதி இரவு சோதனையின்போது சுரேஷ், விக்னேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து, தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். காவலர்கள் கடுமையாக தாக்கியதில் விக்னேஷ் உயிரிழந்தார். இதனையடுத்து உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் விக்னேஷ் மரணம் குறித்து நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசார ணைக்கு எடுத்துள்ளது. ஆணையத் தலைவர் எஸ்.பாஸ்கரன், இந்த வழக்கு குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.