மரக்காணம்,ஜன.31- மரக்காணம் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தர்பூசணி வியாபாரம் சூடுபிடித்துள்ளது. ஒரு டன் ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள விவசாயிகள் கோடைகாலத்தை கணக்கில் கொண்டு தர்பூசணி சாகுபடியில் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டும் நடுக்குப்பம், வண்டிப்பாளையம், ஆலத்தூர், வடநெற்குணம், ஆலங்குப்பம், ஆத்தூர், நகர், அடல், ஓமிப்பேர் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பருவமழை ஓய்ந்து கோடை காலம் தொடங்குவதற்கான பருவ நிலை உருவாகி வருகிறது. பெரும்பாலும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடித்து வருகிறது. இதனால் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே மக்கள் வெயிலை சமாளிக்கும் வகையில் இளநீர் உள்ளிட்ட பானங்களை தேடி செல்ல தொடங்கி விட்டனர். அந்த வகையில் தற்போது சந்தைக்கு தர்பூசணியையும் விற்பனைக்கு கொண்டு செல்லும் விதமாக மரக்காணம் பகுதியில் தர்பூசணி அறுவடை பணியை விவசாயிகள் தொடங்கி விட்டார்கள்.
ஒரு டன் தர்பூசணியை ரூ. 15,000 என்கிற விலையில் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக வாங்கி, சென்னை, கோவை மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு லாரிகளில் அனுப்பி வைத்து வருகிறார்கள். பொதுவாக மரக்காணம் பகுதியில் விளையும் தர்பூசணிக்கு என்று தனி சுவை இருக்கும். எனவே எப்போதும் இந்த பகுதி தர்பூசணிக்கு தனி மார்க்கெட் உண்டு. இதனால் தான் வியாபாரிகள் இந்த பகுதியில் முகாமிட்டு பழங்களை வாங்கி செல்கிறார்கள். அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் தர்பூசணி அறுவடை காலக்கட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக, முழு ஊரடங்கு அமலில் இருந்தது. எனவே வியாபாரிகள் இந்த பகுதிக்கு வருவதற்கு தயக்கம் காட்டினர். எனவே கடந்த ஆண்டுகளில் ஒரு டன் தர்பூசணி பழங்கள் ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரைக்கும் தான் விலை போனது. இதனால் இதை சாகுபடி செய்த விவசாயிகளின் பொருளாதாரம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது. ஆனால், இந்த ஆண்டு, ஊரடங்கு போன்ற பிரச்சினைகள் இல்லாத காரணத்தினால், வியாபாரிகள் அதிகளவில் வந்து போட்டிபோட்டு வாங்கி செல்ல தொடங்கி உள்ளனர். எனவே தர்பூசணி வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
தொடக்கத்திலேயே ஒருடன் தர்பூசணி ரூ. 15 ஆயிரம் வரைக்கும் உயர்ந்து காணப்படுகிறது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், மகசூல் என்பது குறைவாக இருக்கிறது. அதாவது ஒரு ஏக்கரில் 15 டன் வரைக்கும் தர்பூசணி பழங்கள் கிடைக்கும். ஆனால் தற்போது 7 டன் தான் கிடைக்கிறது. இது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளையில் மரக்காணம் தாலுகாவில் தர்பூசணி கொள்முதல் நிலையம் அல்லது தர்பூசணி அங்காடி மையம் அமைத்து உரிய விலை நிர்ணயம் செய்து, விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைத்திட வழி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.