districts

img

தடுப்புச் சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரி

எண்ணூர்,ஜன.20- பக்கிங்காம் கால்வாய் மேம்பால தடுப்பு சுவரில் மோதி டிரைலர் லாரி அந்தரத்தில் தொங்கியது.  சென்னை மீஞ்சூரை அடுத்த எண்ணூர் துறை முகத்தில் சரக்குகளை இறக்கி விட்டு டிரைலர் லாரி ஒன்று வடசென்னை அனல் மின் நிலையம் வழியாக வந்துக்கொண்டிருந்தது. லாரியை எர்ணாவூரை சேர்ந்த ரபீக் என்பவர் ஓட்டி வந்தார். பக்கிங்காம் கால்வாய் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு முன்னால் சென்ற லாரியின் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதாக கூறப் படுகிறது. இதனால் ரபீக், முன்னால் சென்ற லாரி மீது  மோதாமல் இருக்க லாரியை  இடதுபுறமாக திருப்பினார். இதில் அவரது கட்டுப் பாட்டை இழந்த டிரைலர் லாரி, மேம்பாலத்தின் தடுப்பு  சுவரை உடைத்துக்கொண்டு பாய்ந்தது. இதில் லாரியின் முன்பகுதி பாலத்தில் இருந்து அந்தரத்தில் தொங்கியது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அப்போது ராட்சத ஏணியை கொண்டு மேம்பாலத்தில் இருந்து அந்தரத்தில் தொங்கிய லாரியில் சிக்கி தவித்த டிரைவர் ரபீக்கை பத்திர மாக மீட்டதுடன் கிரேன் மூலம் லாரியும்  மீட்டனர்.