districts

img

நினைவு சின்னங்களாக மலைவாழ் மக்கள் வீடுகள்

அடிப்படை வசதிகள் இல்லாததால் தருமபுரி அருகே சொந்த கிராமத்தை விட்டு  மலைவாழ் மக்கள் வெளியேறியதால், அங்குள்ள பாழடைந்த வீடுகள் நினைவு சின்னங்களாக காட்சியளிகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட புள்ளஅள்ளி கிராமம் மலைத்தொடரில் அமைந்துள்ளது. மலைத் தொடர்கள் நிறைந்த புள்ளஅள்ளி கிராமம் 150 ஆண்டுகள் பழமையானது. இங்கு 150 ஆண்டு களுக்கு முன்பு 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் மலை மீது ஏறி, கரடு முரடான பாதைகளை கடந்துதான் இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும். இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி, குடிநீர், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெவ்வேறு இடங்களுக்குச் சென்று விட்டனர். இந்த கிராமத்தில் தற்போது 4 வீடுகளில் மட்டும் மக்கள் வசிக்கின்றனர். இங்கு வசிபவர்களும் தருமபுரி மாவட்டத்திற்கு சென்று வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி கழுதைகள், குதிரைகள் மூலம் ஏற்றி வருகின்றனர். உடல்நலம் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகளை டோலி கட்டி 8 கிலோ மீட்டர் மலைப்பாதையின் வழியாக சுமந்து வந்து தருமபுரி மாவட்டத்திற்கு சென்று சிகிச்சை பெறும் அவலநிலை உள்ளது.

பெரும்பாலான பொதுமக்கள் வெளியேறி விட்டதால் அவர்களது வீடுகள் பராமரிப்பின்றி பாழடைந்து, புதர்மண்டி காணப்படுகின்றன. பழு தடைந்த வீடுகள் நினைவு சின்னங்கள் போல் காட்சியளிக்கின்றன. மேலும் வீடுகளில் கிராம மக்கள் பயன்படுத்திய பழங்கால பொருட்கள், உடைந்த மேற்கூரை ஓடுகள், மண் பானைகள் உள்ளிட்டவைகள் அப்படியே கிடக்கின்றன. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- இந்த கிராமத்தில் வசித்த மலை கிராம மக்கள் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், அவர்கள் தங்களது விவசாய நிலங்கள், வீடு, வாசல் அனைத்தையும் அப்படியே விட்டு விட்டு வெளியேறி தருமபுரி மாவட்டம் பஞ்சப்  பள்ளி, மாரண்டஅள்ளி பகுதிகளில் தற்போது வசிக்கின்றனர். கிராம மக்கள் வசித்த வீடுகள் பாழடைந்து காணப்படுகிறது. பழமையான இக்கிராமத்தை விட்டு செல்ல மனமில்லாமல் சிலர் மட்டும் இங்கு வசித்து வருகின்றனர். எனவே சாலை, பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். மேலும் எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.