சென்னை, மே 18- உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு டாக்டர் மோஹன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் தாம்பரம் கிளை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். நீரிழிவு நோய் நிபுணர்கள் மற்றும் தாம்பரம் கிளையின் மருத்துவர்கள், டாக்டர் பிரசன்ன குமார் குப்தா, டாக்டர் ஜெ.செல்வ குமார் இருவரும் நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்பு, உயர் ரத்த அழுத்தத்தைத் எவ்வாறு தடுப்பது மற்றும் கட்டுப்படுத்தப்படாத உயர் ரத்த அழுத்தத்தின் பின்விளைவுகள் குறித்து இருவரும் விளக்கினர். மேலும் அவர்கள் பேசுகையில், உயர் ரத்த அழுத்தம் தற்போது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. அதுவும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இல்லையென்றால் அது ஒரு அதிசயம் தான். நீரிழிவு நோய் இருப்பவர்களில் ஐந்தில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இதனை கட்டுப்பாட்டில் வைப்பது மிகவும் அவசியம். இல்லையெனில் இவை இருதயம், கல்லீரல் மற்றும் பக்கவாதம் சம்பந்தமான நோய்களை உருவாக்கும். மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு முறை, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றால் இதனை கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்றனர்.