கடலூர், நவ.17- கடலூரில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவு கடலூர், நெல்லிக்குப்பம், ரெட்டிசாவடி, பண்ருட்டி, வடலூர்,நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து லேசான சாரல் மழை பெய்து வருகிறது. நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக கடலூரில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி உள்ளது. கடலூர் கங்கனாகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பாபா நகர், எம்.ஆர்.நகர் உள்ளிட்ட பல பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகளில் கனமழை காரணமாக மழை நீர் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொருட்கள் அனைத்தும் சேதமானதாக அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். தேங்கிய மழைநீர் நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.