சென்னை, ஜூன் 18-
பள்ளி சீருடைகள் தைக்கும் பணியை தனியாரிடம் வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என சென்னை பெருநகர தையல் தொழிலாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் வடசென்னை மாவட்டத் தலைவர் பி.கோவிந்தசாமி, செயலாளர் ஜி.குணசேகர், பொருளாளர் ஆர்.மணிமேகலை, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் சுந்தரம், செயலாளர் ஆனந்தன், துணைத் தலைவர் ராஜேந்திரன், துணைச்செயலாளர் குணசேகரன் ஆகியோர் சமூக நலத்துறை இயக்குநரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், மகளிர் நலனை பாதுகாக்க பல்வேறு நலத்திட்டங்களை அமலாக்கி வரும் தமிழ்நாடு அரசு பள்ளி சீருடை தைக்கும் பணியை தனியாரிடம் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். பள்ளி சீருடை தைக்கும் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு 2014 - 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கூலி உயர்வை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.