புதுச்சேரி, ஜூலை 28 - வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்க ளுக்கு இலவச இணைய இணைப்பு தர வேண்டும் என்று புதுச்சேரி மாநில கட்டற்ற மென்பொருள் வன்பொருள் இயக்கம் வலியுறுத்தி உள்ளது. கேரள மாநில இடது முன்னணி அரசைப் போன்று, புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச பைபர் இணைய இணைப்பை, மாதம் 200 ஜிபி-யை 100 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்க வேண்டும். தனியார் தொலைத்தொடர்பு நிறு வனங்கள் உயர்த்தியுள்ள அநியாய செல்போன் கட்டணத்தை இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைய (டிராய்) ரத்து செய்து, குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி சேவைகளை நாடு முழுவதும் துரிதமாக வழங்க வேண்டும், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 1ஜிபிபிஎஸ் அதிவேக இணைய சேவையை வழங்க வேண்டும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தேவையற்ற தனிநபர் தகவல்களை சேகரிப்பதையும், திருடுவதையும் தடுக்க வேண்டும், அனைத்து அரசு துறைகள், பள்ளி, கல்லூரிகளில் கட்டற்ற (ஓபன் சோர்ஸ்) மென்பொருள்களை மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும், புதுச்சேரி மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிறன்று (ஜூலை 28) அண்ணாசிலை அருகிலிருந்து மக்கள் சந்திப்பு பிரச்சார பேரணி நடைபெற்றது. அமைப்பின் தலைவர் ஜி.ராகுல்காந்த் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் செயலாளர் எஸ்.கமலவேலன், எஸ்.அர்ஜூன், கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவர் பிரசன்னா வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.