சென்னை, அக். 22 - மருத்துவ ஊழியர்களை செவிலியர் பணி யிடங்களில் பணியமர்த்தும் நட வடிக்கையை பெருநகர சென்னை மாநக ராட்சி கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.சுபின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செவிலியராக பணி செய்ய, ஒருவர் மூன்றரை ஆண்டுகள் டி.ஜி.என்.எம் பட்டய படிப்பு அல்லது 4 ஆண்டுகள் பி.எஸ்.சி நர்சிங் முடித்திருக்க வேண்டும். இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் படித்திருப்பதுடன், மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். இந்த தகுதி உடையவர் மட்டுமே மருத்துவமனையில் செவிலியராக பணி செய்ய முடியும். இதற்கு மாறாக, சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மருத்துவமனை செவிலியர் பணியிடங்களில், கல்வித்தகுதி இல்லாத துணை செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், மகப்பேறு உதவியாளர் போன்றோரை கொண்டு நிரப்ப முடிவு செய்துள்ளது. இது அடிப்படை விதி மீறலாகும். இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையில் குறைபாடுகள் ஏற்படுவதுடன் நோயாளிகளுக்கு அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் நிலைஉள்ளது. மருத்துவ பணிகள், தேர்வாணையத்தின் (எம்ஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்டு அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். இத்தகைய தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. எனவே, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 மாற்றியமைத்து, அரசு மருத்துவமனைகளில் 9 ஆண்டுகளாக தொகுப்பூதிய முறையில் பணி செய்யும் செவிலியர்களை கொண்டு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.