districts

img

நிரந்தர பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்களை ஈடுபடுத்தாதே கடலூர் சிப்காட் பகுதிமாநாடு வலியுறுத்தல்

கடலூர், அக்.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் சிப்காட் பகுதி குழு 24 வது மாநாடு பச்சையாங் குப்பத்தில் நடைபெற்றது. மாநாட்டு கொடியை மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.ஆளவந்தார் ஏற்றி வைத்தார். சிப்காட் பகுதி குழு உறுப்பினர் எம்.தேவநாதன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். பி.ஸ்ரீநாத் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். மருதவாணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ் கண்ணன் வாழ்த்துரை வழங்கினார். சிப்காட் செயலாளர் எம்.சிவானந்தம் வேலை அறிக்கையையும் பி.குமார் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கருப்பையன் நிறைவுறையாற்றினார்.  சிப்காட் பகுதிக்குழு உறுப்பினர் ஏ.ஜெயக்குமார் நன்றி கூறினார். பகுதிக்குழு தேர்வு  9 பேர் கொண்ட சிப்காட் பகுதிக் குழுவிற்கு செயலாளராக எம்.சிவானந்தம் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் சிப்காட் தொழிற்சாலைகளில் வெளியேறும் நச்சு புகையினாலும், மாசடைந்த காற்றினாலும் சிப்காட் சுற்றியுள்ள பச்சையாகுப்பம், குடிகாடு, காரைக்காடு, செம்மாங்குப்பம், சங்கிலி குப்பம், ஈச்சங்காடு, முதுநகர் மற்றும் சிப்காட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகும் கிராமப் பகுதியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு தகுதிக்குஏற்ப வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், காரைக்காடு கிராமத்தில் சுத்தமான குடிநீர் கிடைக்கவும், வடிகாலை தூர் வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.