திருவண்ணாமலை,ஆக .12- திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக நாள்தோறும் இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் சாகுபடி செய்த நெற்பயிர்கள் முற்றிலும் மழைநீரில் மூழ்கி சேதமாகியுள்ளது. கலசபாக்கம், மேல்சோழங்குப்பம், போளூர், ஆரணி, செய்யார், செங்கம் உள்ளிட்ட வட்டாரங்களில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் சேதமாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் பரவலாக மழைபெய்து வருகிறது. கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு (ஆக.11) இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இந்த தொடர் மழை காரணமாக, 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது 82 அடி உயரம் நீர்மட்டம் நிறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 960 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. கலசப்பாக்கம் அருகே உள்ள மிருகண்டா அணை நிரம்பி வினாடிக்கு 255 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. குப்பநத்தம் அணையும் நிறைந்துள்ளதால் செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், செய்யாறு மற்றும் மிருகண்டா நதி கரையோரம் உள்ள காந்தபாளையம், சிறுவள்ளூர், எலத்தூர், வில்வாரணி உள்ளிட்ட கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜமுனாமரத்தூரில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஜவ்வாது மலை அடிவாரம் உள்ள அத்திமூர் கிராமத்தில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. செங்கம் பெருமாள் கோயில் தெருவில் அமைந்திருந்த சிறுவர் பூங்காவின் சுற்றுச்சுவர் தொடர் மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே, மழையால் வேறோடு சாய்ந்த மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் அருகே உள்ள கேட்டவரம்பாளையம், வீரளூர், மேல்சோழங்குப்பம், காந்தபாளையம், தேவராயன்பாளையம், கிடாம்பாளையம், கெங்கவரம், சிறுவள்ளூர், செங்கம் அருகே உள்ள, அரிதாரி மங்கலம், அடிவாரம், வீரளூர், வந்தவாசி அருகே உள்ள ரங்கராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், ஆரணி தாலுகாவில் உள்ள 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களும் மழைநீரில் மூழ்கி சேதமாகியுள்ளது. தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். - ஜே.எஸ்.கண்ணன்