சென்னை,டிச.21- டிஜிட்டல் பரிவர்த்தனை அதிக ரித்துள்ள போதிலும் ரொக்கமாக பணத்தை கையாளுதல் கணிசமான அளவு நீடிக்கிறது என்று வங்கிகளுக்கு பணத்தை பாதுகாப்புடன் கொண்டு செல்லும் சேவையில் ஈடுபட்டுள்ள ரேடியன்ட் கேஷ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் டேவிட் தேவசகாயம் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது நிறுவனத்தின் பங்கு வெளியீடு டிச.23 ஆம் தேதி தொடங்கி டிச.27 ஆம் தேதி முடிவடையும் என்றும் ஒரு பங்கின் விலை ரூ.94 முதல் ரூ.99 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். வெளியீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம், 220 பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கவச வேன்களை வாங்குவதற்கான மூலதனச் செலவுத் தேவைகளுக்கும் (சுமார் ரூ.25 கோடி) நிதி தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும். ரூ.287 கோடி மதிப்புடைய இந்நிறுவனம் சில்லறை பண மேலாண்மைச் சந்தையின் பணப் போக்குவரத்துப் பிரிவில் சுமார் 40 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக ரூ.400-ரூ.500 கோடி மதிப்பிலான பணத்தை கையாளுகிறது.