districts

img

இயற்கை வேளாண்மைக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை

இயற்கை வேளாண்மைக்கு  கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை திருவண்ணாமலை, ஜன.7- தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை உழவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்த  குழுவினர், தமிழகத்தின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தலைமை செயலாளர்  என். முருகானந்தம்  ஆகியோரை சந்தித்து, 2025-26 ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் 30 விழுக்காடு நிதியை, இயற்கை வேளாண்மைக்கு ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இயற்கை வேளாண் மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்ற அடிப்படையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய 50 கோரிக்கைகளுடன் கூடிய ஒரு பரிந்துரை ஆவணம் தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டது. தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு, மாநிலத்தின் 6 முக்கிய மண்டலங்களான திருவண்ணாமலை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை மற்றும் தஞ்சாவூரில் உழவர்களுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தியது. மாநிலத்தின் அனைத்து வேளாண் மண்டலங்களையும் உள்ளடக்கிய இந்த கூட்டங்களில் 500 க்கும் மேற்பட்ட உழவர்கள் பங்கேற்று தங்களின் முக்கிய பரிந்துரைகளை அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில், நிர்வாகிகள் பாமையன், ஷீலு பிரான்சிஸ், அனந்து, ராம சுப்பிரமணியன், வானகம் வெற்றிமாறன், என்.டி.சிவகுமாரன், கார்த்திக் ஆகியோர் அடங்கிய குழுவினர் உடன் இருந்தனர்.