சென்னை,ஜூன் 20-
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. இதில் தற்போது 1286 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விட்டு, விட்டு பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. செவ்வாயன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 640 கனஅடி தண்ணீர் வருகிறது.
தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் பூண்டி ஏரியில் நீர் மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே ஏரியின் மதகுகள் அருகே கரைகள் பலத்த சேதம் அடைந்து காணப்படுகிறது. தற்போது அதிக அளவு தண்ணீர் உள்ளதால் அந்த விரிசல்களில் காற்றின் வேகத்தில் தண்ணீர் வேகமாக மோதி வருவதால் அதில் மண் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பருவமழைக்கு முன்னர் கரைகள் முழுவதையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதற்கிடையே ஏரியில் உள்ள 8 மற்றும் 9-வது மதகுகள் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அதிகாரிகள் சீரமைக்க திட்டமிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். ஆனால் பூண்டி ஏரியில் தற்போது அதிக அளவு தண்ணீர் இருப்பதாலும், கிருஷ்ணா தண்ணீர் வந்துகொண்டு இருப்பதாலும் இந்த பணி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.