districts

img

சாதி மறுப்பு திருமண தம்பதிக்கு சிபிஎம் பாராட்டு

கடலூர்,ஜன.24- கடலூர் மாவட்டம், திருமுட்டம் வட்டம், பேரூர் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் மகன் ராஜதுரை. இவர் பட்டதாரி. பட்டியல் இனத்தை  சேர்ந்தவர். அரியலூர் மாவட்டம், கு.வெள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் மகள் வேல்விழி. இவர், மாற்று சமூகத்தை சார்ந்த பட்டதாரி. இருவரும், திருமுட்டம் தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது 5 வருடமாக காதலித்தனர். இந்த காதலுக்கும் திருமணம் செய்து கொள்வதற்கும் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இந்த நிலையில், திருமுட்டம் பேரூர் ராஜதுரை என்பவர் வீட்டில் தஞ்சமடைந்தார்  வேல்விழி. பெண்ணின் உறவினர்கள் ராஜதுரை இல்லத்திற்கு சென்று தகராறு செய்தனர். சோழதரம் காவல் நிலையத்திற்கு மணமகன் வீட்டார்  தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் தலையிட்ட நிலையில், இருவருக்கும் திருமண வயது இருந்தும் திருமுட்டம் காவல் துறை ஆய்வாளரின் ஒரு தலைப்பட்ச நடவடிக்கையால் வேல்விழி பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காவல்துறை ஆய்வாளர் ஒரு தலைபட்சமான முடிவை எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் செய்தார், இதையடுத்து, அரியலூர் மாவட்டம், செந்துறை நீதிமன்றத்தில் வேல்விழி, ராஜதுரை  இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், காவல்துறையினர் மிரட்டல், உறவினர் அச்சுறுத்தல் அனைத்தையும் மீறி நீதிபதியின் உத்தரவுப்படி திருமுட்டம் வட்டம், பேரூர் ராஜதுரை குடும்பத்தினரிடம் வேல்விழி ஒப்படைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பேரூர் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அன்றைய தினமே சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர்கள் எஸ்.வாலன்டினா, பி.சுகந்தி, ஜி. பிரமிளா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் வாஞ்சிநாதன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.தேன்மொழி, எஸ்.பிரகாஷ் செந்துறை ஒன்றிய செயலாளர் அர்ஜுனன், திருமுட்டம் வட்டச் செயலாளர் தினேஷ் பாபு ஆகியோர் ஏற்பாட்டால் இந்த திருமணம் நடைபெற்றது. சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியை சிபிஎம் கடலூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்ட மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.