சென்னை, அக். 13 - மயிலாப்பூர் தொகுதியில் பலவீனமான நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும். தற்போது நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. கட்சியின் மயிலாப்பூர் பகுதி 14வது மாநாடு ஞாயிறன்று (அக்.13) மயிலாப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், ஆர்.இ.கோயில் மக்களுக்கு அருகாமையிலேயே மாற்று இடம் தர வேண்டும், திருவள்ளுவர் சாலை டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவதை திரும்ப பெற வேண்டும், நொச்சிக்குப்பம் விரிவடைந்த குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும், கணேசபுரம், ரோட்டரிநகர், மாயாண்டி காலனி மக்களுக்கு இலவச குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி செங்கொடியை ஏற்றினார். பகுதிக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்க, அஞ்சலி தீர்மானத்தை பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.விஜயா வாசித்தார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார் தொடக்கவுரையாற்றினார். வேலை அமைப்பு அறிக்கையை பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவியும், வரவு செலவு அறிக்கையை ஆர்.ரமேசும் சமர்ப்பித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் அழகுநம்பி வெல்கின், எஸ்.ஜெயசங்கரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் நிறைவுரையாற்றினார். பகுதிக்குழு உறுப்பினர் ஜெ.அன்புரோஸ் நன்றி கூறினார். பகுதிக்குழுதேர்வு 9 பேர் கொண்ட பகுதிக்குழுவின் செயலாளராக ஐ.ஆர்.ரவி தேர்வு செய்யப்பட்டார்.