சென்னை, மார்ச் 26- கோவை - சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கவுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அதிவேக ரயில்கள் இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு மைல்கல். இதன் வழித்தட சேவை எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்த வரை சென்னையில் இருந்து மைசூர் வழித்தடத்தில் ஒரு வந்தே பாரத் ரயில் தற்போது இயக்கப்படுகிறது. இந்நிலையில் கோவை - சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கவுள்ளது. வரும் ஏப்ரல் 8ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி இந்த புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். கோவை - சென்னை இடையே உள்ள 495.28 கி.மீ தூரத்தை இந்த வந்தே பாரத் ரயில் 6 மணிநேரம் 10 நிமிடங்களில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு கோவையில் புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில் மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்றடையும். பின்னர், மதியம் 2.20 மணிக்கு சென்னையில் புறப்படும் இந்த ரயில் 8.30 மணிக்கு கோவை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் மற்ற அனைத்து நாட்களும் இயங்கும் என்றும் கோவை - சென்னை வழித்தடத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
செங்கோட்டை விரைவு ரயில்
சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் விரைவு ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது திருவாரூர், காரைக்குடி வழியாக தென்காசி சென்று பின்னர் செங்கோட்டையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.