districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ 
ரயில் நிலையங்களில் வணிக வளாகங்கள்

சென்னை, ஆக. 25- சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 50 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவுப் பகுதி களில் வணிக வளாகங்கள் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஆய்வு நடத்த டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி காரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தற்போது முதல் கட்டமாக இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் இயங்கி வரும் நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மூன்று வழித்தடங்களில் ரூ. 63 ஆயிரத்து 741 கோடி மதிப்பீட்டில் 128 ரயில் நிலையங்களுடன் 116.1 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட திட்டத்தில் மாதவரம்-சிறுசேரி வரையிலான மூன்றாவது வழித்தடம் 45.4 கி.மீ. தொலைவிற்கும், பூந்தமல்லி பைபாஸ் முதல்-கலங்கரை விளக்கம் வரையிலான நான்காவது வழித்தடம் 26.1 கி.மீ. தொலைவிற்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான ஐந்தாவது வழித்தடம் 44.6 கி.மீ. தொலைவிற்கும் அமைக்கப்பட்டு வருகிறது. தினசரி லட்சக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வரும் நிலையில், மெட்ரோ ரயில் சேவை வழங்குவது மட்டுமின்றி மெட்ரோ ரயில் நிறுவனம் மாற்று வழிகளில் வருவாய் ஈட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது 50க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவுப் பகுதிகளில் வணிக வளாகங்கள் அமைத்து வருவாய் ஈட்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் நுழைவுப் பகுதிகளை இணைத்து வணிகப் பகுதி களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு பிரத்யேக வடிவமைப்புகளில் கட்டிடங்கள் அமைக்கப்படும். இந்த கட்டிடங்கள் தனியார் அலு வலகங்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், உண வகங்கள் நிறைந்த வளாகங்களாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 50 மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவுப் பகுதிகளில் இந்த வணிக வளாகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆய்வு செய்ய 8 டெண்டர்கள் விடப்பட்டுள்ளது. சில இடங்களில் வணிக வளாகங்கள் அமைப்பது தொடர்பாக ஆய்வும் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்பு மெட்ரோ ரயில் நிலையத்துடன் வணிக வளாகங்கள் ஒன்றாக சேர்ந்து அமைக்கப்பட்டுள்ளது. இப்போது மெட்ரோ ரயில் நிலையத்தில் நுழைவுப் பகுதியில் வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் அனைத்து சுரங்கம் மெட்ரோ ரயில் நிலையங்களை சுற்றியும் வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை ஆட்சியர் ஆய்வு

ராணிப்பேட்டை, ஆக.25- ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா, சனிக்கிழமை வாலாஜா வட்டம், அம்மூர் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவ சாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மற்றும் வேளாண் பொருட்கள் குறித்தும், விளை பொருட்கள் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்தார்.

குட்டையில் குளிக்கச் சென்ற அண்ணன் -தங்கை பலி

ராணிப்பேட்டை, ஆக.25 குட்டையில் குளிக்கச் சென்ற அண்ணன் -தங்கை இருவரும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூ ராட்சிக்கு உட்பட்ட புன்னை ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம், கூலித்தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று பள்ளி விடுமுறை தினம் என்ப தால் பரமசிவத்தின் 3 குழந்தைகளும் அருகில் உள்ள குட்டையில் குளிக்க சென்ற னர். அப்போது எதிர்பாராதவிதமாக தினேஷ், சுப்ரியா ஆகிய இருவரும் நீரில் மூழ்கியதை கண்ட மூன்றாவது மகன் ரஞ்சித் தன் தந்தையிடம் ஓடி சென்று நடந்ததை கூறி அழைத்து சென்றான். ஆனால் அவர்கள் வருவதற்குள் அண்ணன்- தங்கை இருவரும் நீரில் மூழ்கி விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பரமசிவம் கூச்சலிட்டு கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரில் மூழ்கி பலியான அண்ணன் -தங்கையை சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நெமிலி போலீசார் குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெட்ரோ ரயில் பணி: சென்னையில்  இரவு நேரங்களில் போக்குவரத்து மாற்றம்

சென்னை, ஆக.25- மெட்ரோ ரயில் பணிக்காக சென்னை யில் ஞாயிறு முதல் 27ம் தேதி வரை இரவு நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மவுண்ட் பூந்தமல்லி ரோடு - புஹாரி ஹோட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை சென்னை மெட்ரோ ரயில் பணியின் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  ஞாயிறன்று இரவு முதல் அமலுக்கு வந்தது.  அதன்படி, வரும் 27ம் தேதி வரை இரவு நேரங்களில் (இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை) சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து போரூர் செல்லும் வாகனங்களில் எந்த மாற்றமும் இல்லை. அவை வழக்கம் போல் இயக்கப்படும். போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பில் உள்ள மவுன்ட் பூந்த மல்லி சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் புதிய சாலையை நோக்கி இடதுபுறம் திரும்பு வார்கள் (புஹாரி ஹோட்டலுக்கு எதிரே உள்ள போர் கல்லறை - பெல் ராணுவ சாலை சந்திப்பில்) டிஃபென்ஸ் காலனி 1வது அவென்யூ (வலதுபுறம்) - கண்டோன்மென்ட் சாலை (இடதுபுறம் திருப்பம்) - சுந்தர் நகர் 7வது குறுக்கு - தனகோட்டி ராஜா தெரு - சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தெற்கு கட்ட சாலை - ஒலிம்பியா X 100 அடி சாலை சந்திப்பு வழியாக செல்லலாம். இங்கி ருந்து, வாகனங்கள் கத்திப்பாராவை அடைய வலதுபுறமாகவும், வடபழனியை அடைய இடதுபுறமாகவும் தங்கள் இலக்குகளை நோக்கிச் செல்லலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு ஏற்ற இயர்பட்ஸ் ஐக்யூஓஓ அறிமுகம்

சென்னை, ஆக. 25-  ஐக்யூஓஓ நிறுவனம் புதிய ‘இசட்9எஸ் புரோ 5ஜி’, இசட்9எஸ் 5ஜி’ ஸ்மார்ட்போன்கள் மற்றும்  டிடபிள்யூஎஸ் 1இ இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இளம் தலைமுறையி னருக்கு ஏற்ற வேகம், பிரகாசமான டிஸ்பிளே மற்றும் மெலிதான வளைந்த வடிவமைப்பைக் புதிய போன்கள் கொண்டுள்ளது. ‘இசட்9எஸ் புரோ 5ஜி’ ஆகஸ்ட் 23 நண்பகல் 12 மணி முதல் ரூ.21, 999லியிருந்தும்;  இசட்9எஸ் 5ஜி ரூ.17,999 முதல் ஆகஸ்ட் 29 நண்பகல் 12 மணியிலிருந்து அமேசான்.இன் மற்றும் ஐக்யூஓஓஇ-ஸ்டோரில் கிடைக்கும். டிடபிள்யூஎஸ் 1இ இயர்பட்ஸ் விலை ரூ.1,899; 42 மணி நேர பேட்டரி பேக்-அப்புடன் வருகிறது.

கருவேப்பிலங்குறிச்சி உதவி ஆய்வாளரை  கண்டித்து  செப்.3 சிபிஎம் போராட்டம்

கடலூர், ஆக. 25- பொய் வழக்கு பதிவு செய்த கருவேப்பிலங்குறிச்சி உதவி  ஆய்வாளர் சிவ ராமனை கண்டித்து செப் 3  ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று சிபிஎம் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. திட்டக்குடி வட்டம் பாசிக்குளம் புதிய காலனி கிராமத்தில் வசிக்கும் ஆதி திராவிடர் சமூகத்தை சார்ந்த பாஸ்கர் என்பவரை கடந்த ஆக.8ஆம் தேதி கருவேப்பிலங்குறிச்சி உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் அவருடன் வந்த காவலர்கள் போதை பொருள் தேடுதல் என்ற பெயரால் கைது செய்துள்ளனர். பாஸ்கரன் வீட்டிற்கு சென்ற காவல்துறை யினர் வீட்டை முழுமையாக சோதனை செய்துள்ளனர். ஆனால்  போதை பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும்  பாஸ்கர்  மற்றும் அவரது  மனைவி காந்திமதி ஆகியோரை  உதவி ஆய்வாளர் கடுமையான வார்த்தைகளால் பேசியதோடு, அவர்களது  ஜாதியை சொல்லி  திட்டி உள்ளார். இதை வீடியோ எடுத்த பாஸ்கரன் தங்கை வைத்திருந்த செல் போனையும் பிடுங்கி வைத்துக்கொண்டார். பிறகு பாஸ்கரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொய்யான வழக்கு பதிவு செய்து கடலூர் மத்திய சிறைக்கு அனுப்பிவிட்டனர். சிறைச்சாலையில் காந்திமதி கணவர் பாஸ்கரனை சந்தித்து பேசி உள்ளார்,  அப்போது பாஸ்கரன் தனக்கு மிகவும் மன உளைச்சலாக உள்ளது, எனவே தன்னை விரைவில் பிணையில் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த நிலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி பாசிக்குளம் புதிய காலனி கிராம ஊர் தலைவருக்கு காவல்துறையினர்  போன் செய்து பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லை, அவரை கடலூர் அரசு தலைமை மருத்துவமணையில் சேர்த்துள்ள தாக தகவல் சொல்லி உள்ளனர். இதை அறிந்த பாஸ்கரன் மனைவி காந்திமதி மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது அங்கே அவரது கணவர் பாஸ்கரன் இறந்து கிடந்தார். நல்ல நிலை யில் இருந்த  அவர் எப்படி உயி ரிழந்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் பாஸ்கரன் மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஸ்கரன் வீட்டுக்கு சென்று அடித்து  ஜாதியைச் சொல்லி திட்டிய உதவி ஆய்வாளர் சிவராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை கைப்பற்றாமல் பாஸ்கரன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ள உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஸ்கர் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தர விட வேண்டும். உயிரிழந்த பாஸ்கருக்கு வினோதினி (14) பவித்ரா (13) யாசினி ( 8 )சுபிக்ஷா (11 )ஆகிய நான்கு பெண் குழந்தைகள் உள்ளார்கள் அவர்களுக்கு தமிழக அரசு  ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். நான்கு பெண் குழந்தைகளை பாது காக்க பாஸ்கரன் மனைவி காந்திமதிக்கு  அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரி சிபிஎம் சார்பில் செப் 3ஆம் தேதி கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திட உள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி  தேமுதிக நிர்வாகி உயிரிழப்பு

கடலூர், ஆக.25- பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மறைந்த தேமுதிக தலைவர்  விஜயகாந்த் பிறந்தநாளை கொண்டாட நடுக்குப்பங்கு கிராமத்தில் கொடியேற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. அந்த கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் நெய்வேலியில் ஒப்பந்தப்பணி செய்து வருகிறார். தேமுதிக தலைவர்  விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டார். கொடிகம்பம் நடும் போது  மேலே சென்ற உயர் அழுந்த மின்சாரக் கம்பியில் கொடிக்கம்பம் உரசியதால் தேமுதிக நிர்வாகி வெங்கடேசன் சம்பவ இடத்திலே  உயிரிழந்தார்.  அவரை காப்பாற்ற முயற்சி செய்த மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள்  பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கெடிலம் ஆற்றில் வெள்ளத்தடுப்பு பணிகள்

கடலூர்,ஆக. 25- தென்பெண்ணை யாறு மற்றும் கெடிலம் ஆற்றில் பல்வேறுபகுதிகளில் மேற்கொள்ளப்பட வுள்ள வெள்ளத் தடுப்புபணிகள் குறித்து கடலூர்  மாவட்ட ஆட்சித்தலைவர்  சிபி ஆதித்யாசெந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் வட்டம், அழகிய நத்தம் - இரண்டாயிரம்  வளாகம் மற்றும் பண்ருட்டி வட்டம், மேல்பட்டாம்பா க்கம் ஆகிய பகுதி களில் தெண்பெண்ணையாற்றின் கரையில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பண்  ருட்டி வட்டம், பகண்டை பகுதியில் தென்பெண்ணை யாற்றின் நீர்வரத்து வடிகால் வாய்க்கால் மற்றும் வெள்ளத் தடுப்பு பணி கள் மேற்கொள்வது குறித்தும் மற்றும் மேல்குமார மங்கலம் பகுதியில் தென்பெண்ணையாற்றில் தலைப்பு மதகு, வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட வெள்ளத் தடுப்புபணிகள் மேற்கொள்ளது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.