ரோசய்யா மறைவுக்கு புதுவை முதல்வர் இரங்கல்
புதுச்சேரி,டிச.4- ரோசய்யா மறைவிற்கு இரங்கல் தெரிவித்து புதுச்சேரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தமிழக முன்னாள் ஆளுநருமான ரோசய்யா உடல்நலக் குறைவால் காலமானார் என்கிற செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. ஆந்திர மாநிலத்தில் அமைச்சராகவும் முதலமைச்சராகவும் திறம்பட செயலாற்றி வெற்றிகரமான தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட ரோசய்யா தமிழக ஆளுநராக இருந்தபோது கட்சி பாகுபாடின்றி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கின் மூலம் ஆளுமை மிகுந்த சக்தியாகத் திகழ்ந்தவர். அமைதிக்கும் ஆளுமைத் திறனுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த மூத்த அரசியல் தலைவர் ரோசய்யா இழப்பு தென்னிந்திய அரசியலில் ஈடுசெய்ய முடியாதது ஆகும்.அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
இல்லம் தேடி கல்வி திட்டம் திருப்பத்தூரில் அறிமுகம்
ஆம்பூர், டிச.4 - திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் இராஜாவூர் கிராம ஒன்றிய துவக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி விழா நடைபெற்றது. பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க தன்னார்வலர்கள் மூலம் நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின்கீழ், மாணவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இப்பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக சாதனைகளை படைத்து வருகிறது. இதற்கு முழு காரணம் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் இந்திரா. இதன் காரணமாகவே தற்போது தனியார் பள்ளிகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர். தலைமை ஆசிரியர் இந்திரா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி குழுவினர் நடனமாடியும் பாட்டுப் பாடியும், மலர் தூவியும் வரவேற்றனர். இந்த நிகழ்வில் கிராம மக்களும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.
வீடுகளுக்குள் புகும் கழிவு நீர்
சின்னாளப்பட்டி, டிச.4- திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி-ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் செம்பட்டி பகுதியில்க ழிவுநீர் வாய்க்கால் குறிப்பிட்ட அளவு போடாததால் வீடு களுக்குள் கழிவுநீர் புகுந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறை உடனடியாக நட வடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலை சரி செய்ய வேண்டும்.