மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கடலில் மூழ்கி பலி
திருவள்ளூர், ஜன. 19- திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே திருமலை நகர் கிராமத்தில் வசித்தவர் அர்ஜூனன். இவர் புதன்கிழமை அதிகாலை அதே கிராமத்தைச் சேர்ந்த அப்பாஸ், நந்தன் ஆகியோருடன் பழவேற்காடு அருகே உள்ள கடலில் மீன்பிடிக்க சென்றார். அதிகாலை கடலுக்கு சென்ற இவர்கள் மீன் பிடித்து விட்டு திரும்பும்போது பழவேற்காடு முகத்துவாரம் அருகே தவறி கடலில் விழுந்த அர்ஜூனன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். பல மணி நேரம் தேடியும் கிடைக்காத காரணத்தினால் திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு மீனவர்கள் தகவல் அளித்தனர். இந்நிலையில் 8 மணி நேரத்திற்குப் பிறகு அவரது உடல் கரை ஒதுங்கியது. காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காலமானார்
சென்னை, டிச. 19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் சி.செங்கல்வராயனின் தாயார் காந்தாமணி செவ்வாயன்று (செப்.18) காலமானார். அவருக்கு வயது 90. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நெட்ரம்பாக்கம் கிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்த அவரது உடலுக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, தீ.சந்துரு, விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி, சென்னை மற்றும் புறநகர் கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.நடராஜ் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் புதனன்று அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் (செப்.19) தகனம் செய்யப் பட்டது.
விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு
சென்னை, ஜன. 19 - கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். சென்னை தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரம் பி.டி.சி கோட்ரஸ் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் ராஜேஷ் (35), ஏழுமலை (35) ஆகியோர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கழிவுநீர் தொட்டியில் இருந்த விஷவாயு தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் மணிமங்கலம் காவல்நிலையத்திற்கும், தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கழிவுநீர் தொட்டியில் இறந்து கிடந்த இருவரின் உடலையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
2 குழந்தைகளுடன் ஆட்டோ ஓட்டுநர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு
மறைமலைநகர், ஜன. 19- மறைமலை நகர் அருகே ஆட்டோ ஓட்டுனர் தனது இரு மகள்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். சென்னை புதுப்பேட்டை பச்சையப்பன் முதலி தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஞானவேல் (44). இவரது மனைவி ஜெயந்தி (38). இவர்களுக்கு ஐஸ்வர்யா (5), பூஜா (3) ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் ஞானவேல் தனது இரண்டு குழந்தைகளுடன் கடந்த 15ஆம் தேதி ஆட்டோவில் வெளியே சென்றதாகவும், பின்னர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி ஜெயந்தி எழும்பூர் காவல் நிலைத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகர் கடம்பூர் எனும் கிராமத்தில் உள்ள விவசாய கிணறு அருகே ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருப்பதாக காவல் துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் காவல் துறையினர், இறந்த நிலையில் 2 சிறுமிகளையும் ஒருவரையும் மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நடத்திய விசாரணையில் அது எழும்பூரில் காணமல் போன ஞானவேல் என்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
சென்னை, ஜன. 19- சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சேகர். இவர் சமூக ஊடகங்களில் ஒன்றான முகநூலில் அவ்வப்போது கருத்துக் களை பகிர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ் காட்டு மிராண்டி மொழி என்றும், தமிழக அரசு குறித்து அவதூறாக வும் கருத்துகளை முகநூலில் பதிவு செய்ததாகக் கூறப்படு கிறது. இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜூவாலுக்கு புகார்கள் சென்றன. அந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதை யடுத்து உயர் அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில், சேகர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து சீருடை பணியாளர்களுக்கான நடத்தை விதிமுறைகளை மீறியதாக காவல் உதவி ஆய்வாளர் சேகரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜூவால் புதன்கிழமை உத்தரவிட்டார்.
தற்போதைக்கு கிருஷ்ணா தண்ணீர் வேண்டாம் ஆந்திர அரசிடம் தமிழகம் வலியுறுத்தல்
ஊத்துக்கோட்டை, ஜன. 19- சென்னை குடிநீர் ஏரிக ளில் போதுமான அளவு தண்ணீர் நிரம்பி இருப்பதால் ஏப்ரல் மாதம் வரை பூண்டி ஏரிக்கு, கிருஷ்ணா தண்ணீர் திறந்துவிட வேண்டாம் என்று ஆந்திர அரசுக்கு நீர் வளத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் (11.7டி.எம்.சி.) சேமித்து வைக்கலாம். வடகிழக்கு பருவமழை கடந்த 2 மாதமாக கொட்டித் தீர்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. தற்போதைய நிலவரப்படி 5 ஏரிகளிலும் மொத்தம் 10 ஆயிரத்து 971 மில்லியன் கன அடி தண்ணீர் (10.9 டி.எம்.சி.) உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 93 சதவீதம் ஆகும். சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப் படி ஆந்திரா மாநிலம் கண்ட லேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 12 டி.எம்.சி.தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் வழங்க வேண்டும். தற்போது சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் நிரம்பி இருப்பதால் ஏப்ரல் மாதம் வரை பூண்டி ஏரிக்கு, கிருஷ்ணா தண்ணீர் திறந்துவிட வேண்டாம் என்று ஆந்திர அரசுக்கு நீர் வளத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி ஆகும். இதில் 3 ஆயிரத்து 122 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
மேலும் கிருஷ்ணா தண்ணீரை சேமிக்க பயன்படும் கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியும் முழு கொள்ளளவான 500 மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. எனவே கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டால் அதனை பூண்டி, கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி களில் சேமித்து வைக்க முடி யாத நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் திறப்பை ஏப்ரல் மாதம் வரை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். கோடைகாலத்தை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீர் வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை குடிநீர் ஏரிக ளில் போதுமான அளவு தண் ணீர் உள்ளது. கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டால் தண்ணீரை ஏரிகளில் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படும். சராசரியாக தற்போது மாதந்தோறும் 1,200 முதல் 1,500 மில்லியன் கன அடி வரை தண்ணீர் குடிநீருக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏரிகளில் தண்ணீர் இருப்பை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் வரை கிரு ஷ்ணா நதி நீர் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள் ளோம். மேலும் கண்டலேறு- பூண்டி ஏரி இடையேயுள்ள கிருஷ்ணா கால்வாயின் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை மார்ச் மாதத்துக்குள் சரி செய்து முடிக்க திட்டமிட் டுள்ளோம். இதற்காக ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. கிருஷ்ணா கால்வாயில் தொடர்ந்து சிறிதளவு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் இந்த பணி மெதுவாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறி னார்.
உணவகத்தில் தீ விபத்து
சென்னை, ஜன. 19- சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஒரு உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் இருந்த பொருட்கள் புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உணவக ஊழியர்களும், அருகே இருந்த ஜவுளிக் கடை ஊழியர்க ளும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அணைக்க முடியவில்லை. பின்னர் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தி.நகர், தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தின் காரண மாக, ரங்கநாதன் தெருவில் மின் விநியோகம் துண்டிக் கப்பட்டது. இந்த தீ விபத்தில் உணவகத்தில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாம்பலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் குடித்து பலியான மாணவி பள்ளி தலைமை ஆசிரியர் கைது
திருவண்ணாமலை, ஜன.19- திருவண்ணாமலையில் 11 ஆம் வகுப்பு மாணவியை திருமணமான வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததில், கர்பமான அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், பொறுப்புடன் செயல்படாத பள்ளி தலைமை ஆசிரியர் மற்றம் விடுதி வார்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை மாணவி கடந்த சில ஆண்டுகளாக பழங்குடியினர் நலத்துறை உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து வந்தார். அவர், 11 ஆம்படித்து வந்த நிலையில் கொரோனா பரவல் விடுமுறை காரணமாக திருவண்ணாமலை வந்து தனது பெற்றோருடன் தங்கியிருந்தார். பின்னர் கடந்த அக்டோபர் மாதம் பள்ளிக்குச் சென்றார். அந்த மாணவிக்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விடுதி வார்டன் மாணவியிடம் விசாரித்துள்ளார். பின்னர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து மாணவியை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்து அவரிடம் வயிற்று வலி தொடர்பாக பெற்றோர்கள் விசாரித்துள்ளனர். இதற்கு பதில் அளிக்க மறுத்த மாணவி எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இதுபற்றி அறிந்த காவல்துறையினர் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அந்த வாலிபரின் நபரின் பெயரை எழுதி காட்டினார். அதன்பேரில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஹரிபிரசாத்தை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவி குறித்து பொறுப்புடன் செயல்படாத பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் விடுதி வார்டன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.